சூடு பிடித்துள்ள காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயல்-சம்மேளன விவகாரம்: உறுப்புரிமையிலிருந்து நீங்குவதாக பள்ளிவாயல் கடிதம் மூலம் தெரிவிப்பு

  • ஏ.எல். டீன்பைரூஸ்

mettaகாத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பல்வேறுபட்ட பணிகளில் அன்றுதொட்டு இன்றுவரை மிகக் கூடுதலாக பங்களிப்பினை செய்து வருகின்ற பெரிய பள்ளிவாயல்களில் ஒன்றான காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலானது தாங்கள் காத்தான்குடி சம்மேளன உறுப்புரிமையிலிருந்து நீங்குவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி சம்மேளனம் மற்றும் மெத்தைப் பள்ளிவாயல் முரண்பாடு என்பது பல்வேறு பட்ட சர்ச்சைகளை எதிர்காலத்தில் தோற்றிவிக்கும் அளவிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

மேலும இந்த முரண்பாடு என்பது அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயல் நிர்வாக சபை தெர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் என்று கூறிக் கொண்டாலும் இதில் பல்வேறுபட்ட விடயங்கள்,பிரச்சினைகள்,பின்னனிகள் உள்ளிருப்பதாக ஜமாஅத்தார்கள், பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுமையுடன் ஒரு மேசையில் இருந்து பேச வேண்டிய விடயத்தில் முரண்பட்டுக் கொள்வது என்பது ஆரோக்கிய மற்ற செயல்பாடு என்றே பலரும் கருதுகின்றனர்.

அல்லாஹ்வின் இறையில்லமான பள்ளிவாயல்களை பராமரிக்கின்றவர்கள்,பொது நிறுவனங்களின் பொதுச் சேவை செய்கின்றவர்கள் பக்கச்சார்பின்றி படைத்தவனுக்கு மாத்திரம் பணிந்து செயல்படுதல் என்பது பிரதானமான ஒன்றாகும்.

அந்த வகையில்; காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் தற்போதைய நிருவாக சபை தாங்கள் காத்தான்குடி சம்மேளன உறுப்புரிமையிலிருந்து நீங்குவதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டி கடிதம் ஒன்றினை கடந்த 28.03.2017 காத்தான்குடி சம்மேளனத்திற்கு அனுப்பி;யுள்ளதுடன் அதனை ஊடகங்களில் பிரசுரிக்குமாறும் வேண்டியுள்ளர்.

பள்ளிவாயல் நிருவாகத்தினரால் அனுப்பப்பட்ட கடிதம்……….

தலைவர்,செயலாளர்,
ப.மு.நி.சம்மேளனம்,
காத்தான்குடி.
27.03.2017.

அன்புடையீர்.
அஸ்ஸலாமு அலைக்கும்.

சம்மேளன உறுப்புரிமையிலிருந்து நீங்குதல்

காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு தொடர்பாக சம்மேளனத்தின் வாராந்த கூட்டங்களில் தொடராக விமர்சிக்கப்பட்டு வருவது எமக்கு மிகுந்த விசனத்தை எற்படுத்தியுள்ளது.

பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களாக செயல்படும் சிலர் பள்ளிவாயல் நிருவாக சபைக் கூட்டங்களில் எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் சம்மேளனக் கூட்டத்தில் பள்ளிவாயல் தொடர்பாக விமர்சிப்பதும் எமக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சம்மேளனத்தின் செயலாளர் பக்கசார்பாகச் செயல்படுவதும் 26.03.2017 ம் திகதி நடைபெற்ற சம்மேளன வாராந்தக் கூட்டத்தில்; பள்ளிவாயல்களின் நிருவாகத் தெரிவு தொடர்பாக இரண்டு கடிதங்கள் சம்மேளனத்திற்கு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் மற்றையது முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் தொடர்பானது எனக் கூறிய அவர் மெத்தைப் பள்ளிவாயல் தொடர்பான கடிதத்தை மாத்திரம் வாசித்து, மெத்தைப் பள்ளிவாயல் நிருவாக தெரிவிற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி எமது பள்ளிவாயலின் செயலாளர் தெளிவாக எடுத்துக் கூறியும் மீண்டும் மெத்தைப் பள்ளிவாயலை பற்றி விமர்சிப்பதற்கு அனுமதித்தது எமக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

metta

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மெத்தை பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு தொடர்பாக சம்மேளனத்தால் எழுதப்பட்ட கடிதத்தை வாசிக்குமாறு தலைவர் கூறிய போது அக்கடிதம் வருவதற்கிடையில் ஜம்இய்யத்தல் உலமாவின் உப தலைவரின்; கையடக்க தொலை பேசியிலிருந்து செயலாளரினால் வாசிக்கப்பட்டுள்ளது. (சம்மேளனக் கடிதம் உப தலைவரின் கையடக்க தொலை பேசிக்கு எவ்வாறு சென்றது…?)

நடு நிலையாகச் செயற்பட வேண்டிய சம்மேளனம் பக்கசார்பாக செயல்படுவதாக எமக்க தோன்றுகின்றது. அத்துடன் 26.03.2017 திகதி நடைபெற்ற சம்மேளன நிருவாகக் கூட்டத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் செயலாளர் அவர்கள் முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத் தெரிவு நடக்காமல் முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் சம்மேளனத்தில் உப தலைமை பதவியை வகிக்குமானால் சம்மேளனத்திற்கான செயலாளரை ஜம்இய்யத்துல் உலமா சிபார்சு செய்யாது எனக் குறிப்பிட்டதாக அறிகின்றோம். சம்மேளனம் இயங்குவதற்கு ஜம்இய்யத்தல் உலமாவின் அங்கத்தவம் முக்கியமானது.

எனவே இன்றிலிருந்து காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திலிருந்து முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் தனது உறுப்புரிமையை விலக்கிக் கொள்ளத் தீர்மானித்தள்ளது.

சம்மேளனம் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளிலும் எமது பள்ளிவாயலின் பங்களிப்பு இனிமேல் தரப்படமாட்டாது என்பதனையும் மன வேதனையுடன் அறியத்தருகின்றோம்.

அல்லாஹ் எமது துயபணிகளை அங்கிகரிப்பானாக. ஆமீன்

தலைவர், செயலாளர்
முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல்.

இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Published by

Leave a comment