யார் இந்த காலித் மசூத்?

khalid terror londonலண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1964-ஆம் ஆண்டு, கென்ட் மாகாணத்தில் டார்ட்ஃபோர்டு மாவட்டத்தில் உள்ள பிறப்பு பதிவு மையத்தில், ஆட்ரியன் ரஸல்ஸ் எம்ஸ் என்று பதிவாகியுள்ளது. எம்ஸ் என்பது அவரது தாயின் ஆரம்பப் பெயர். அவர் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறு, அஜோ என்ற நபரைத் திருமணம் செய்துகொண்டார். இஸ்லாம் மதத்துக்கு மாறி, மசூத் என்று வைத்துக் கொள்ளும் முன்பு, தனது பிற்பகுதி பெயரை அடிக்கடி மாற்றி வந்தார்.

மதம் மாறியது ஏன்?

தாயும், அவரது கணவரும் கென்ட் மாகாணத்தில் டுன்பிரிட்ஜ் வெல்ஸ் பகுதியில் நீண்ட காலம் வாழ்ந்தனர். அங்குதான், அப்போது ஆட்ரியன் என்ற பெயரில் இருந்த மசூத், ஆண்களுக்கான பள்ளியில் படித்து வந்தார். அதன்பிறகு, வேல்ஸ் பகுதிக்கு மாறினார்.

அவர்களது வீட்டில், தீவிரவாதத் தடுப்புப் படையினர் சோதனை நடத்திய போதிலும், அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் கண்டறியப்படவில்லை.
மசூத்தை முன்னரே தங்களுக்குத் தெரியும் என்றும், உடலில் காயத்தை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற குற்றச் செயல்களுக்காக அவர் அறியப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர், 18 வயதில் இருக்கும்போது, 1983-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கிரிமினல் குற்றம் ஒன்றுக்காக முதல் முறையாக தண்டனை பெற்றார். கடந்த 2000-ஆவது ஆண்டில், கிழக்கு எஸெக்ஸ் பகுதியில் மதுவகம் ஒன்றில் ஒரு நபரைக் கத்தியால் தாக்கியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். பியர்ஸ் மோட் என்பவர் மீது ஆத்திரமடைந்து அவரது முகத்தில் கத்தியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

கடந்த 2003-ஆம் ஆண்ட சிறையிலிருந்து விடுதலையாகி ஈஸ்ட்போர்னுக்கு குடிபெயர்ந்த பிறகு, மீண்டும் நீதிமன்றப் படியேறினார். இருபத்தி இரண்டு வயது இளைஞர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், கத்தி வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் தண்டிக்கப்பட்டார்.

மொத்தத்தில். மூன்று சிறைகளில் அவர் தண்டனை அனுபவித்தார். 40 வயதாக இருக்கும்போது, கடைசியாக சிறை தண்டனை அனுபவித்தார். அதன் பிறகு, மற்ற குற்றவாளிகளைப் போல, அவரும் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டாரா? அல்லது, பல முன்னாள் குற்றவாளிகளைப் போல, மதம் அவருடைய ஆத்திரத்துக்குத் தீனி போட்டுவிட்டதா?

khalid terror london

சூழ்நிலைகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, தனது கடைசி சிறை தண்டனைக்குப் பிறகுதான் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற முடிவு செய்ததாகக் தெரிகிறது. ஏனெனில், கடைசி விசாரணையில் அவர் முஸ்லிம் பெயரைத் தரவில்லை. எது தெளிவாகப் புரியவில்லை என்றால், வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர் ஏன் மாறினார், எப்படி மாறினார் என்பதுதான்.
கடந்த 2016-ஆம் ஆண்டு, கிழக்கு லண்டனில், மசூத் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார். அப்போது அவருடன் இருந்த துணைவி உள்ளிட்ட 10 பேர் கைது செயப்பட்டனர். அவரது கடைசி முகவரி பேர்மிங்கம்.

இன்னும் கிழக்கு லண்டனில் வாழும் அவரது துணைவியான 39 வயதுப் பெண், வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வாரத் துவக்கத்தில், பர்மிங்காமில் உள்ள ஒரு வாடகைக்கார் நிறுவனத்தில், ஆசிரியர் என்ற அடையாளத்தைச் சொல்லி, காரை வாடகைக்கு எடுத்தார். ஆனால் அவர் எப்போதும், தகுதி படைத்த ஆசிரியராப் பணியாற்றியதில்லை. காரை வாடகைக்கு அமர்த்திய ஒரு மணி நேரத்துக்குள், அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தனக்கு இனி கார் தேவையில்லை என்று தெரிவித்தார். அடுத்து என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை.

ஆனால், தாக்குதலுக்கு முன்னதாக, பிரைட்டன் பகுதியில் உள்ள ஒருஹோட்டலில் அவர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. காலித் மசூத் என்ற பெயரில் தங்கிய அவர், கடன் அட்டை மூலம் கட்டணம் செலுத்தியிருப்பதாக ஹோட்டல் மேலாளர் பிபிசியிடம் தெரிவித்தார். நட்போடும் இன்முகத்தோடும் இருந்த அவர், தான் பேர்மிங்காமிலிருந்து வந்திருப்பதாகவும், நண்பர்களைச் சந்திப்பதாகவும் தெரிவித்ததாக மேலாளர் தெரிவித்தார். அவரைப் பற்றி கணினிப் பதிவில் `நல்ல விருந்தினர்’ என்று வரவேற்புப் பணியாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த ஹோட்டலில் அவர் பயன்படுத்திய டவல், பாத்திரங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களைக் கைப்பற்றிய போலீசார், அவர் அதே நபர்தான் என்பதை உறுதி செய்வதற்கான மரபணு சோதனைகளுக்காக அதைப் பயன்படுத்த இருக்கின்றனர்.
புதன்கிழமையன்று ஹோட்டலைக் காலி செய்துவிட்டு வெளியேறிய அவர், அன்று பிற்பகலில் தனது தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
தற்போது நடக்கும் விசாரணை எந்தக் கோணத்தில் நடக்கிறது என்பது தெரியவில்லை.

Published by

Leave a comment