காத்தான்குடி: 1979இல் காத்தான்குடியில் ஜம்மிய்யத்துல் உலமா சபையினருக்கும், மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி தரப்பினர்களுக்குமிடையில் ஏற்பட்ட மார்க்கப்பிளவுகள் தற்பொழுது சுமார் வருடங்கள் 40 ஐத் தொட்டுக்கொண்டிருக்கின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்தினருக்கும், மௌலவி அப்துர் ரஊப் தரப்பு ஆதரவாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தின் பின்னர், மீண்டும் காத்தான்குடியின் மார்க்கப்பிரச்சினைக்கான தீர்வு தலைதூக்கப்பட்டிக்கின்றது.
மௌலவி அப்துர் ரஊப் தரப்பினருக்கு எதிராக காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவும், சம்மேளனமும் இணைந்து வெளியிட்ட துண்டுப்பிரசுரமும் சமூக வலைத்தளங்களில் தற்பொழுது சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றன.
தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கடந்த வெள்ளிக்கிழமை செயற்பாடுகள், அவ்வியக்கத்தை தடைசெய்வதற்கும், அவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் என அரசாங்கத்துக்கு எத்தி வைப்பதிலும் அதிக ஈடுபாடுகள் தே.தௌ.ஜமாஅத்தை விரும்பாதவர்களுக்கு நற்தருணமாக அமைகின்றன.

காத்தான்குடியில் ஆயுதங்களும், பயங்கரவாதச் செயற்பாடுகளும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் இருப்பதாக தே.தௌ.ஜமாஅத்திற்கு எதிரானவர்களால் கச்சிதமாக எழுதியனுப்பப்பட்ட கட்டுரைகளை சில ஊடகங்களும் பிரசுரித்திருந்தன.
சமூக வலைத்தளங்களில் மீண்டும் தௌஹீத் ஆதரவாளர்களும் , மௌலவி அப்துர் ரஊப் தரப்பினரும் காணொளிகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு இன்றைய செயற்பாடுகள் சென்றுகொண்டிருக்கையில், 40 வருடங்களைத் தொடும் அதாவது 2 சந்ததிகளைத் தாண்டி, 3வது சந்ததிகளையும் தொட்டுச்செல்லும் இவ்வேளையில், காத்தான்குடியின் மார்க்கப்பிளவுகளும், அதனால் எதிர்நோக்கும் விளைவுகளும் எதிர்காலத்திலும் தவிர்க்க, தடுக்க முடியாதவை.
எனவே, எல்லாமே 2004இல் முடிந்துவிட்டது. இப்போது எதற்கு இவ்விடயத்தை மீண்டும் தூசி தட்டவேண்டும் என வாய்மூடி இருப்பது எதிர்கால காத்தான்குடிக்கு ஆரோக்கியமானதல்ல! இவ்விடயத்தில் உலமாக்களும், பொதுநிறுவனங்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
பிளவுபட்ட மார்க்க இயக்கங்களால் அரசியல்வாதிகளுக்கும் வாக்கு வங்கிகளில் பலத்த நெருக்கடி தோன்றி இருந்தமையை கடந்த தேர்தல் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தது.
எனவே, அரசியல்வாதிகளும் பக்கச் சார்பின்றி களத்தில் இறங்கி, 40 வருடங்களைத் தொடும் இம் மார்க்கப்பிளவுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என யுவர்காத்தான்குடி ஊடாக கேட்டுக்கொள்கின்றோம்.
- யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்
Leave a comment