லொஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த ஆட்சியின் போது அமெரிக்க லொஸ்ஏஞ்சல்ஸ் தூதரக அலுவலகத்திற்கு என கூறி குத்தகைக்கு சொகுசு வீடொன்றை பெற்றுக்கொண்ட போதும், அது கோத்தபாயவின் மகனின் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
எனினும் இதனை விசாரணை செய்வதற்காக அமெரிக்கா சென்று இலங்கை பொலிஸார் இருவர் FBI அதிகாரிகளால் கைதுசெய்யப்படக்கூடிய நெருக்கடிக்கு முகங்கொடுத்ததாக இரகசியத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. கோத்தபாயவின் மோசடி தொடர்பில் விசாரணை செய்ய அமெரிக்க சென்ற பிரதி பொலிஸ் மா வைத்தியலங்கார மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர பிரேமரத்ன ஆகியோரே இந்த நெருக்கடிக்கு முங்கொடுத்துள்ளனர்.
அப்போதைய லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தூதரக அலுவலகத்தில் ஜெனராலாக செயற்பட்ட மல்ராஜ் டி சில்வாகே மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட கோத்தபாயவின் தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்ட பிரிகேடியர் ஜயரத்நாய ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
மல்ராஜ் டி சில்வாவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வொஷிங்டன் தூதுவர் அலுவலகத்திற்கு வருமாறு விடுத்த கோரிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
அவர் அமெரிக்க பிரஜை என்பதனால் அவசியம் என்றால் தான் கூறும் இடத்திற்கு வருமாறு கோரியுள்ளார். பின்னர் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் மல்ராஜை சந்தர்ப்பத்தற்காக அவர் தங்கியுள்ள இடத்திற்கு சென்ற போதிலும் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அங்கு FBI அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைத்தந்த இரண்டு வழக்கறிஞர்கள் மல்ராஜிடம் விசாரணை மேற்கொள்வதற்கு எவ்வித உரிமையும் கிடையாதென சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் தாங்கள் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அறிவித்ததன் பின்னரே வருகைத்தந்ததாக கூறிய பொலிஸ் அதிகாரிகளிடம், குற்றம் தொடர்பில் அமெரிக்க பிரஜைகளிடம் விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை எனவும், அது அமெரிக்க சட்டத்திற்கு எதிரானதென்பதனால் பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் கைது செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் தங்களுக்கு கிடைத்த சிறிய அனுமதியில் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் பரிசோதகர், அப்போதே வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தை நோக்கி சென்று அன்றைய தினமே இலங்கைக்கு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்டமையினால் விசாரணை நடவடிக்கைகளுக்காக, இலங்கையிலிருந்து கொண்டு சென்று ஆவணங்களையும் அமெரிக்காவில் விட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குற்ற விசாரணை நடவடிக்கைக்காக வெளிநாடு ஒன்றிற்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ராஜதந்திர நடைமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படாமையினால் இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்திலும், நிதி மோசடி விசாரணை பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by
![Gotabaya[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/gotabaya1.jpg?w=120&h=150)
Leave a comment