கேப்டவ்ண்: முதல் இரண்டு போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்ததால், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் டிவில்லியர்ஸ் 63 ஓட்டங்களும், ஹெண்டிரிக்ஸ் 41 ஓட்டங்களும், மொசுல் 32 ஓட்டங்களும் எடுத்து அசத்தினர்.
இதைத் தொடர்ந்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. துவக்க வீரர் தரங்கா 20 ஓட்டங்கள், சண்டிமல் 5 ஓட்டங்கள், டி சில்வா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
துவக்கவீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வந்த டிக்வெல்லா அரைசதம் கடந்து 68 ஓட்டங்கள் எடுத்த போது ஆட்டமிழக்க இலங்கை அணி சற்று தடுமாறத் தொடங்கியது.
விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த பிரசன்னா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை நிறுத்தவில்லை. இதனால் இலங்கை அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.
அப்போது குசால் மெண்டிஸ் 2 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதனால் கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் பட்டெர்சன் வீச, முதல் பந்தை எதிர் கொண்ட குணரத்னே நான்கு ஓட்டங்கள் விளாச, 5 பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அடுத்த பந்தில் ஒரு ஓட்டம், அதற்கு அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் என ஆட்டம் அனல் பறந்தது.நான்காவது பந்தை எதிர் கொண்ட குணரத்னே மீண்டும் ஒரு நான்கு ஓட்டங்கள் விளாச வெற்றி இலங்கை பக்கம் திரும்பியது. இறுதியில் ஐந்தாவது பந்தில் ஒரு ஓட்டம் எடுத்து இலங்கை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் இத்தொடரின் தொடர் நாயகன் என்ற இரண்டையும் இலங்கை அணியின் டிக்வில்லேவுக்கே வழங்கப்பட்டது.

Leave a comment