மூதூர்: திருக்கோணமலை மூதூர் பிரதேசத்தின் ஹபீப் நகர் பிரதேச கடலில் நீராடச் சென்ற மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிட்டம்புவ, திஹாரி பிரதேசத்தை சேர்ந்த குறித்த மூவரும், மூதூர் பகுதிக்கு வந்திருந்த வேளையில், இன்று (23) பிற்பகல் கடலில் குளிப்பதற்காகச் சென்ற வேளையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
மொஹமட் நௌஷாட் (19), காதர் ஹசன் (17), மொஹமட் இக்ராம் (20) ஆகிய திஹாரியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்முறை சாதாரண தர பரீட்சையில் தோற்றிய 07 மாணவர்கள் மார்க்க அடிப்படையிலான பயணம் (ஜமாத்) ஒன்றை மேற்கொண்டு திஹாரி சென்றுள்ளதோடு, அங்கு மூதூர் 07 ஆம் வட்டாரத்திலுள்ள ஹபீப் நகர் பள்ளிவாசலில் தங்கியிருந்துள்ளனர்.
இதில் நால்வர் நீராடுவதற்காக கடலுக்கு சென்றுள்ளதோடு, அவர்களுள் மூவர் இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக மூதூர் ஆதார வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, மூதூர் பொலிஸார் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment