காத்தான்குடி: இப்ப சின்ன சலசலப்பொன்று சமூகவலைத்தளங்களின் ஊடாக இடம்பெற்று வருகிறது. காத்தான்குடியின் பிரதான தனியார் மருத்துவமனையின் “விலைப்பட்டியல்” சலசலப்புத்தான் அது! மருத்துவத்துறையில் இந்தியாவைப் பின்பற்றும் இலங்கையின் தனியார் மருத்துமனைகள் போன்றே காத்தான்குடி தனியார் மருத்துவமனையும் அமைவதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
நோயாளியைக் குணப்படுத்தும் நிலையைவிட கட்டணத்திற்கே காத்தான்குடியின் தனியார் மருத்துவமனைகளில் பல இயங்குவதாக சந்தேகம் தோன்றுகிறது.
ஆரம்பத்தில் ஓர் சிறு நோய் என்று வைத்தியரிடம் சென்ற நோயாளி சில மாதங்கள் சென்ற பின்னர் நோயைக் குணப்படுத்த முடியாமல், குறித்த வைத்திய நிறுவனம் அல்லது வைத்தியர் கைவிட்ட நிலையில் கொழும்புக்கு எடுத்துச் செல்லும் பரிதாபம் ஏற்படுகிறது. கொழும்புக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளும்போது, தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும், நாட்கள் சென்றுவிட்டதால் இனிமேல் குணப்படுத்த முடியாது எனவும் கொழும்பு வைத்தியர்கள் கூறும் நிலைக்கு எமது வைத்தியர்களின் அசமந்தைப் போக்கு அமைகிறது.
கல்வி கற்கும் போது, நான் வைத்தியரானால் முதலில் அல்லாஹ்வுக்காக திருமணம் முடிப்பேன் என்றும், ஏழை எளியோருக்கு உதவி செய்வேன் என்றும், இந்த மண்ணுக்கு எனது சேவையை செய்வேன் எனவும் நிய்யத் வைத்து, பின்னர் வைத்தியரான பலரின் பணத்தாசையை நினைக்கையில் மனவேதனையடைகிறது.
ஓரு வைத்தியரிடம் சிகிச்சை பெற்று, குணப்படுத்த முடியாமல்போன ஒரு தாயார், இன்னொரு மருத்துவரை நாடிச் சென்றபோது, “இந்தப் பிணத்தை எதற்கு இங்கே எடுத்து வருகிறீர்கள்” என்று கேட்கும் வைத்திய மகானும் எமது ஊரில்தான் உள்ளதாக இந்நத்தாய் கூறுகிறார்.
“நோய் என்று போனால் என்ன நோய் என்பதைக் கண்டுபிடிப்பதில்பார்க்கிலும் எவ்வளவு ‘எடுக்கலாம்’ என்பதைத்தான் சிலர் நினைக்கிறார்கள்” என்று இன்னுமொரு நோயாளி தெரிவிக்கிறார்.
இதேபோல், “காத்தான்குடி வைத்தியர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்களை கொழும்பு மருத்துவர்களும், மட்டக்களப்பு மருத்துவர்களும் எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள்” என கேள்வி கேட்கிறார் இன்னுமொருவர்.
ஆளாளுக்கு போட்டிபோட்டு பரிதாபமாக விடப்பட்டிருக்கும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை ஏழைகளுக்கான “பனடோல் வைத்தியசாலை”போல்தான் என்னத் தோன்றுகிறது.
ஏழைகளைத் தவிர வேறு எவரும் அங்கு செல்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றவில்லை.
“நாங்கள் இதைச் செய்தோம், அதைச்செய்தோம், இத்தனை மில்லியன் கொடுத்தோம்” என்று ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கும் எந்த ஒரு அரசியல்வாதியோ அவரது மனைவி, பிள்ளைகளோ காத்தான்குடி வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுவார்களா என்பதையும், எனவே எமது வைத்தியசாலையின் தரம் இன்னும் எத்தரத்தில் இருக்கின்றது என்பதையும் எமது வாசகர்கள் சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
புதிய தனியார் மருத்துவமனையின் மருந்தைவிட, சேவைக் கட்டணமே அதிகமானதாக இருக்கிறது. உதாரணமாக ஒரு ஊசியின் விலை 1000 என்றால், மொத்த பில் 5000 ரூபாய் அறவிடப்பட்டிருப்பது காத்தான்குடி மக்கள் எந்தளவு இன்னும் மடமையில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
நாங்கள் தரம்வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு இயங்குவதால், வைத்தியர்களுக்கன கூலி அதிகமானதாகவே இருக்கும் என தனியார் மருத்துவமனை தெரிவிப்பதிலிருந்தே வைத்தியர்கள் மக்களிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரிந்துவிடுகிறது.
“கொழும்புக்குப் போவதானால் எழுபத்தையாயிரம் வரை செலவாகும், போக்குவரத்துச் செலவு, தங்குமிடம் இப்படி பார்த்தால் ஒன்றுக்கு மேல் வருமே. இதைவிட ஐந்து பத்தை ஊரில் கொடுத்து பார்ப்பது சிறந்ததுதானே” என பலருக்கு மூளைச் சலவை செய்யப்படுவதாகவும் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்களின் பணத்தைக் கறப்பதில் இருக்கும் கவனம், அவர்களுக்கு என்ன நோய் என்பதைக் கண்டுபிடித்து சிகிச்சையளிப்பதில் இருக்கவேண்டும்.
காசுக்கேற்ப குளிசையை அள்ளிக்கொடுத்து, சுகதேகியான ஓருவருக்கு ஈரலையும், கிட்ணியையும் பாழாக்கி, வாழ்நாள் முழுவதும் நோயாளியாக்கி, குடும்பத்தையும் பாழாக்கிய பாவம் நமக்கு எதற்கு?
சிறந்த வைத்தியர்கள், நேர்மையானவர்கள்… இன்னும் எமது ஊரில் இருக்கின்றனர்.
எவர் எப்படி வேண்டுமென்றாலும், தங்களது வைத்தியத் துறையை வைத்து உழைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இறுதியில்….”கொழும்புக்கு ஏத்துங்கள்” என்றுமட்டும் நோயாளிகளைக் கைவிட்டுவிடாதீர்கள்!!
நன்றி,
யுவர்காத்தான்குடிக்காக
இர்ஷாட் ஏ. காதர்.
Published by


Leave a comment