அலெப்போவில் நிலவும் சூழலை டிவிட்டரில் பகிர்ந்த 7 வயது சிறுமியுடன் எர்துவான் சந்திப்பு

Aleppo childஅங்காரா: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கிழக்கு அலெப்போவில் உள்ள நிலைமை குறித்து டிவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்ட பானா அலாபெட் என்ற 7 வயது சிரியா நாட்டு சிறுமி, துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவானை சந்தித்துள்ளார்.

அங்காராவில் உள்ள துருக்கி அதிபர் மாளிகையில், பானா மற்றும் அவரது தம்பி ஆகியோர் எர்துவானின் மடியில் அமர்ந்திருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அலெப்போவை விட்டு பானா மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச் சென்ற பின்னர், பானாவை துருக்கிக்கு அழைத்து வர எர்துவான் ஒரு சிறப்பு பிரதிநிதியை அனுப்பியதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.

சிரியாவில் பானா சந்தித்த இன்னல்கள் , அவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் டிவிட்டர் வலைதளத்தில் சேர்ந்த பிறகு தான் வெளிச்சத்துக்கு வந்தது. பானாவின் டிவிட்டர் வலைதளத்தில், அவரது நண்பர்களின் மரணம் முதல் இயல்பான ஒரு வாழ்வை மேற்கொள்ள அவர் எடுத்துக் கொண்ட முதற்சிகள் வரை அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Aleppo child

இது வரை, 3 லட்சத்தி 25 ஆயிரத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் பானாவுக்கு உள்ளனர்.

இவரது டிவிட்டர் வலைதள பின்தொடர்பாளர்களில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங்கும் உள்ளார்.  புதன்கிழமை, துருக்கி அதிபர் எர்துவானோடு தான் இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டரில் வெளியிட்ட பானா, துருக்கி அதிபரை சந்தித்ததில் தனக்கு மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

”அலெப்போவில் உள்ள குழந்தைகளை ஆதரித்ததற்கும், போரில் இருந்து தங்களை விடுவித்ததற்கும் நன்றி” என்று பானா நன்றி தெரிவிக்கும் ஒரு சிறு காணொளியும் வெளிவந்துள்ளது.

Published by

Leave a comment