லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில் அந்நாட்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய நாட்டின் புதிய நிதி அமைச்சராக ஃபிலிப் ஹம்மோண்ட் கடந்த யூலை பதவி ஏற்றதற்கு பிறகு தற்போது முதன் முதலாக நாடாளுமன்ற பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இதோ!
பொருளாதார வளர்ச்சியில் மந்தம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக அந்நாட்டு குடிமக்கள் வாக்களித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும்.
குறிப்பாக, 2017-ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியானது 2.2 சதவிகிதம் அதிகரிக்கும் என கடந்த மார்ச் மாதம் கணிக்கப்பட்டது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக வேண்டும் என்ற முடிவு எடுத்துள்ளதால் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டு 1.4 சதவிகித அளவில் மட்டும் வளர்ச்சி ஏற்படும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2.1 சதவிகிதம் என்ற கணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியானது 2018-ம் ஆண்டில் 1.7 சதவிகிதமாகவே இருக்கும்.
எனினும், இதனையடுத்து 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்த்தது போல் பொருளாதார வளர்ச்சி 2.1 சதவிகிதத்தை அடையும்.
அரசாங்க கடன் அதிகரிக்கும் அபாயம்
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியை நடத்தவும், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு சுமார் 122 பில்லியன் பவுண்ட் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய நீடிக்க வேண்டும் என வாக்களித்திருந்தால் அரசுக்கு கடன் வாங்கும் இந்நிலை ஏற்பட்டுருக்காது.
இதுமட்டுமில்லாமல், அடுத்து 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அரசு சுமார் 22 பில்லியன் பவுண்ட் நிதி பற்றாக்குறையுடன் ஆட்சி நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அரசு கடன் பெறுவது படிப்படியாக குறைக்கப்படும் எனவும் இந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, நடப்பாண்டில் 68.2 பில்லியன் பவுண்ட், அடுத்தாண்டு 59 பில்லியன் பவுண்ட், 2018/19 ஆண்டுகளில் 21.9 பில்லியன் பவுண்ட் மற்றும் 20.7 பில்லியன் பவுண்ட் எனவும் இறுதியாக 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் 17.2 பில்லியன் பவுண்ட் கடனாக அரசு பெறும்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய பிரியாமல் இருந்தபோது நிதி அமைச்சராக இருந்த ஜோர்ஜ் ஓஸ்போர்ன் ‘அடுத்து 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 10,4 பில்லியன் பவுண்ட் நிதியை மிச்சப்படுத்துவேன்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை
நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஃபிலிப் ஹம்மோண்ட் பேசியபோது, ‘வரும் ஆண்டுகளில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கிய வளர்ச்சிப்பணிகளில் முதலீடு செய்வதை தவிர்த்து பிற செலவினங்களை குறைத்து 2020-ம் ஆண்டிற்குள் நிதி பற்றாக்குறையை 2 சதவிகிதத்திற்கும் குறையாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மீதான வரி ரத்து
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீது வரி உயர்வு ஏற்படுத்தும் முடிவை அரசு 6 ஆண்டுகள் தொடர்ந்து இந்த ஆண்டும் ரத்து செய்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கட்டுமாணப்பணிகளை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு
எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் ரயில்வே துறையை மேம்படுத்துவது, தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள் மற்றும் வீடுகளை அமைக்க அரசு சுமார் 23 பில்லியன் பவிண்ட் முதலீடு செய்யவுள்ளது.
குறைவாக ஊதியம் ஈட்டுப்பவர்களுக்கு உதவி
நாடு முழுவதும் குறைவான ஊதியம் ஈட்டுபவர்களுக்கு உதவும் வகையில் வருமான வரி செலுத்தபவர்களின் உச்ச வரம்பை 12,500 பவுண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வருமானத்திற்கு குறைவாக ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
காப்பீடு பிரீமியம் வரி உயர்வு
நாடு முழுவதும் காப்பீடு பிரீமியம் வரியை 2 சதவிகிதம் உயர்த்தி 2017ம் ஆண்டில் காப்பீடு பிரீமியத்தின் வரி 12 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்படும்.
ஓட்டுனர் இல்லாத மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு நிதியுதவி
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஓட்டுனர் இல்லாத மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்காக 390 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மின்சார வாகனங்களுக்கு மின்சாரம் வழங்க தேவையான கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள முதல் ஆண்டிற்கு மட்டும் 100 சதவிகித முதலீடு அளிக்க அரசு முடிவு
ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் இல்லை
பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய விதிமுறைகளில் தற்போது எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. எனினும், 2020-ம் ஆண்டிற்கு பிறகு இதில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து அரசு ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளில் புதிய கட்டுப்பாடு
பிரித்தானிய நாட்டில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவில் வரிச்சலுகைகளை அனுபவித்து வருவதால் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பீடு ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை உள்ளது.
எனவே, இனி வரும் ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Published by


Leave a comment