கொழும்பு: ஆசிரியரகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுதல், பரிசுப் பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பில் வற்புறுத்தல் போன்றவை தடை செய்யப்படும் என அடுத்த வருடம் தொடக்கம் ஆசிரியர்களுக்கு, பாடசாலை மாணவர்களினால் பெற்றுக் கொடுக்கப்படும் பரிசுகளை தடை செய்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், குளியாபிட்டிய, நக்காவத்த மஹிந்த தேசிய பாடசாலையில் இன்று (19) இடம்பெற்ற இரு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகத்தை மாணவர்களிடம் ஒப்படைத்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 2017 இல் இதனை நடைமுறைபடுத்தும் வகையில், இது குறித்தான சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான நிலை காரணமாக சுதந்திர கல்விக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு, சில வேளைகளில் மாணவர்கள் பாடசாலைகளில் உள ரீதியாக பாதிப்படைவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் இது தொடர்பில் பல பெற்றோர், மனம் வருந்திய நிலையில் தன்னிடம் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டே இத்தீர்மானத்திற்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
Published by


Leave a comment