மட்டக்களப்பு: 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு அவர் பொறுப்பேற்றார். சிங்கள குடியேற்றங்களை செய்கிறார் என்கிற குற்றச்சாட்டில் விடுதலைப் புலிகளால் வாகரைக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இன்று இவரால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மட்டக்களப்பில் மாத்திரம் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கில் நில ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்துபவர் அவர்.
யுத்தம் முடிந்தபின் 2008ஆம் ஆண்டு கிழக்கில் பட்டிப்பளை பிரதேசத்தில் பல சிங்கள மக்களை கொண்டு வந்து பலாத்காரமாக குடியேற்றினார். அவர்களுக்கு அடையாள அட்டைகளையும், வாக்கட்டைகளையும் வழங்கும்படி அந்த பிரதேசத்து கிராமசேவகரிடம் சண்டையிட்டிருக்கிறார்.
சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டவர்களுக்கு இந்த ஆவணங்களை வழங்க முடியாது என்று மறுத்திருக்கிறார் கிராமசேவகர். சுமனரத்ன தேரர் விடாப்பிடியாக பிரதேசசபை, அரசியல் தலைவர்கள் போன்றவர்களையும் அனுகியிருந்தும் சாத்தியப்படவில்லை. ஆனாலும் குடியிருப்பை விஸ்தரிப்பது, பௌத்த விகாரை கட்டுவது என அவரது குடியேற்ற நடவடிக்கை தொடர்ந்தது. சமீபத்தில் மத்தியகிழக்கில் இயங்கும் சிங்கள அமைப்பான “ஹெலபிம இயக்க”த்தின் உதவியுடன் புதிய வீடுகளும், ஏனைய வசதிகளும் கட்டிக்கொடுக்கப்பட்டதாகவும் அதுபோல, கெவிலியாமடுவ, கொஸ்கொல்ல, போன்ற இடங்களிலும் பல வீடுகள் தடைகளுக்கு மத்தியில் புதிதாக அமைக்கப்பட்டதாகவும் சுமனரதன தேரர் தெரிவித்திருந்தார்.
இந்த இடைவெளியில் தமது குடியேற்றத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் யுத்தத்திற்கு முன்னர் அங்கு வாழ்ந்தவர்கள் என்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் என்றும் காரணங்களை அடுக்கியபோதும் அவரால் போதிய ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. யுத்தத்தின் பின்னர் நிகழ்த்தப்படும் சகல திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் இதே காரணத்தைத் தான் முன்வைத்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இப்போது இந்த பிரதேசங்களுக்கு பாடசாலையும், புதிய வீதிகளையும் அமைத்து தரும்படியும் கேட்டிருக்கிறார். இவர் பின்னர் தமக்கு ஆதரவு தேடி ஜாதிக ஹெல உறுமயவின் தயவை நாடினார். பின்னர் பொதுபல சேனாவின் அமைப்பாளராக ஆனார்.
சமீபத்தில் இந்த வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் களவாடி பொருத்தியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பொலிசார் சகிதம் சென்றிருந்த போது சுமனதேரர் அந்த அதிகாரிகளையும் தாக்கி, மோசமான தூசன வார்த்தைகளால் சகலரையும் திட்டியதுடன், மின்வலு சக்தி அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சியையும் மோசமான தூசன வார்த்தைகளால் திட்டிய காணொளி பல இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
பொதுபல சேனாவின் ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றில்
“இது இலகுவாக தீர்க்கப்படக்கூடிய விடயம் ஆனால் இந்த அதிகாரிகள் அதை செய்யவில்லை. சுமனதேரர் எப்படிப்பட்ட மோசமான வார்த்தைகள் பிரயோகித்தாலும் அது தகும். நானாக இருந்தால் அதைவிட மோசமாக நடந்துகொண்டிருப்பேன்.” என்றார்.
சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று கூறி 14.02.2012 அன்று சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். பிள்ளையான் என்னை கொல்ல விரட்டிக்கொண்டு வந்தார்…. தமிழ் தேசிய முன்னணி மூலம் எனக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கிறது” என கூறி சிங்கள ஊடகங்களில் ஒரு சிங்கள ஹீரோவாக ஆக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி மகிந்த சென்றிருந்தபோது சுமனரதன தேரோ சிங்களவர்களை அழைத்துக் கொண்டு சென்று கூட்டம் நடந்த இடத்துக்கு வெளியில் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க போலீசார் எடுத்த முயற்சி இறுதியில் கைகலப்பில் முடிந்தது.
ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்ட ஒருவரை கட்டுபடுத்த எடுத்த முயற்சியில் அவரது உள்ளாடைகள் களைந்தது. இவை அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி கத்திக்கொண்டு நாளா திசைகளிலும் சுமனரதன தேரர் ஓடுகின்ற காணொளி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பதாகைகளில் சில இப்படி இருந்தன.
“கூட்டமைப்பின் மரண அச்சுறுத்தலுக்கு பயந்தா நீங்களும் அமைதி காக்கின்றீர்கள்”
“வாக்குரிமை இல்லை, நிலவுரிமை இல்லை! சிங்களவர்கள் நாங்கள் கள்ளத்தோணிகளா”
“நாட்டை காப்பாற்றிய ஜனாதிபதியே உங்களுக்கு வாக்களிக்க எங்களுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள்”
இந்த சம்பவம் குறித்து நடத்திய பத்திகையாளர் மாநாட்டில் அழுதழுது உணர்வுபூர்வமாக பேட்டியளித்தார். இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தது ஜாதிக ஹெல உறுமய என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜனாதிபதி சென்றதன் பின்னர் பிள்ளையான் என்னை கொலை செய்வதற்காக என் பின்னால் துரத்திகொண்டு வந்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இந்த கூட்டத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள் அவர்கள் எல்லோர் முன்னிலையில் சிங்களவர்களின் ஆடைகளை களைத்த பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அம்பாறையிலிருந்து மட்டக்களப்பு வரை ஒரு சிங்களவரும் இல்லை. வெலிகந்தையிலிருந்து மட்டகளப்பு வரை சிங்களவர் இல்லை. நாங்கள் அதனை செய்கிறோம். எனவே இது யாரின் நிலம், யுத்தத்தோடு தொடர்புண்டா? முன்னர் எங்கிருந்தார்கள்? போன்ற கேள்விகள் எங்களுக்கு அவசியமில்லை.” என்றார்.
இந்த குடியேற்றத்திற்கு வறுமையிலுள்ள சாதாரண அப்பாவி சிங்கள மக்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் இது ஒரு மனிதாபிமான பிரச்சினையாக புனைந்து இதன் உள்ளார்ந்த அரசியலை திசைதிருப்பும் கைங்கரியம் நடக்கிறது. இதனாலேயே பலரால் வாய்திறந்து கதைக்க முடியாதபடி பேணுகின்றனர்.
மட்டக்களப்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்களை பயன்படித்தி இதனை ஒரு உணர்வுபூர்வமான ஒன்றாக காட்டவே முனைந்தனர்.




Leave a comment