இனிய வாசகர்கள் அனைவருக்கும் எனது முஹர்ரம் 1438 இஸ்லாமியப் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹூ
‘வார உரைகல்’ ஊடக நிறுவனத்தின் ஸ்தாபகரும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் வெளியீட்டாளருமான புதிய காத்தான்குடி 06 இல: 43 அப்றார் நகர் வீதியைச் சேர்ந்த முஹம்மது இப்றாஹீம் றஹ்மதுழ்ழாஹ் ஆகிய நான், ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சகல பொதுமக்களுக்கும் உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்துக் கொள்வதாவது:
2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ம் திகதியன்று என்னால் ஆரம்பிக்கப்பட்டு இலங்கை நாட்டினுடைய செய்திப் பத்திரிகையாகவும் பதிவு செய்யப்பட்ட ‘வார உரைகல்’ எனும் பெயருடைய வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எனும் பொறுப்புமிக்க பதவியையும்
இப்பத்திரிகையை எதிர்காலத்தில் தொடர்ந்து வெளியிடும் உரிமையையும்
மற்றும் ‘வார உரைகல்’ எனும் பெயரில் செயற்பட்டு வருகின்ற http://www.vaarauraikal.com எனும் உத்தியோகபூர்வ இணையதளம் vaarauraikal@gmail.com எனும் உத்தியோகபூர்வ மின்னஞல் vaarauraikal எனும் பெயரிலான உத்தியோகபூர்வ twitter SMS குறுஞ்செய்திச் சேவை போன்றவற்றை செயற்படுத்தும் அதிகாரத்தையும்
இப்பத்திரிகையின் துணைப் பிரதம ஆசிரியராக கடந்த 2014.04.18ம் திகதியிலிருந்து மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வந்துள்ள புதிய காத்தான்குடி 03 இல: 53 பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த சகோதரர் ஏ.எல். முஹம்மது நியாஸ் என்பவரிடம் இன்று மலர்ந்துள்ள இஸ்லாமிய முஹர்ரம் புதுவருடத்தின் 1438 முதல் நாளான 2016.10.03ம் திகதியில் எனது வயது மூப்பின் காரணமாக முழுமனதுடன் நிபந்தனைகள் ஏதுமின்றிக் கையளித்து நான் ஓய்வு பெறுகின்றேன்.
இன்றிலிருந்து இப்பத்திரிகையின் அத்திவார இலக்கான “அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான மக்களின் குரல்” எனும் அடிப்படையைப் பேணி நாட்டு மக்களுக்கும் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய இப்பாரிய ஊடகப் பணியை புதிய பிரதம ஆசிரியரும் வெளியீட்டாளருமான சகோதரர் ஏ.எல். முஹம்மது நியாஸ் அவர்கள் எவ்வித நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளுமின்றி சுயமாக மேற்கொள்வார் என்பதனையும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(‘வார உரைகல்’ பத்திரிகையின் ஸ்தாபகரும் அகில இலங்கை சமாதான நீதவானும்)


Leave a comment