கொழும்பு: பெண்களால் இலங்கை பல சந்தர்ப்பங்களில் பல்வேறு புகழ்களை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார் அதிகமுள்ள நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.உலகில் முதல் பெண் பிரதமர், உலகின் முதல் பெண் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆகியோரும் இலங்கையிலேயே உருவாகினர். இவ்வாறு பெண்களால் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பெண்கள் பெரும் துயரகரமான விதியை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டின் இளம் பெண்கள் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு செல்வது அதிகரித்துள்ளதாக சமூக மருத்துவம் தொடர்பான விசேட நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இலங்கையில் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் இருக்கும் இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதை காணமுடிவதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்கொலை செய்து கொள்வோரில் அதிகமானோர் பெண்கள். வருடாந்தம் சுமார் 3 ஆயிரம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்போரில் காணக்கூடிய இரண்டு விசேட அடையாளங்கள் உள்ளன.
ஒன்று தற்கொலை செய்து கொள்வோர் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருப்பது.
இரண்டாது பெண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக நாடுகளை எடுத்து
கொண்டால், ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை காணப்படுகிறது எனவும் மருத்துவர் அமில சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
Published by


Leave a comment