காத்தான்குடி: வழமைபோன்று இம்முறையும் பெருநாள் களைகட்டி இருக்கிறது. நமது மண்ணில் பிறந்த வெளியூர் காரங்களும், வெளிநாட்டுக்காரங்களும் தனது பிறந்த மண்ணில் பெருநாளை, குடும்பங்களுடன் சுவைத்து மகிழ வந்திருக்கின்றனர். வாடகைக் கார்களும், தோரணங்களும், சிறுவர் பஸாரும் விழாக்கோலம் பூண்டுள்ளன. “என்ன இருந்தாலும் பெருநாள் என்றால் அது காத்தான்குடிதான்” என்று எம்மவர்கள் வாயளவில் சொல்லிக்கொண்ட போதிலும், எனது ஊர் காத்தான்குடி என்பதை சொல்லிக்கொள்ள நிறையப்பேர் வெட்கப்படுகின்றனர் என்பதுதான் இன்றைய பெருநாள் சிந்தனையாக யுவர்காத்தான்குடி உங்களை தொட்டுச் செல்கிறது.
மூன்றுமாதம் கொழும்புக்குச் சென்று தனியார் ரியூட்டரியில் படித்துவிட்டால் போதும், பலருக்கு “காத்தான்குடி பாசை” முதலில் மறந்துவிடும்.
வெளியூர் ஆட்கள், “நீங்க எந்த ஊர்” என்று கேட்டாலே போதும் “நான் கழம்புதான்” என்பார்கள் பலர்.
வெளியூர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்களும், தொழில் ரீதியாக வெளியூரில் மற்றும் வெளிநாடுகளில் வசித்துவரும் காத்தான்குடி மண்ணில் பிறந்தவர்கள் சிலர் “காத்தான்குடி எனது ஊர்” என்பதை சொல்ல வெட்கப்படுகின்றனர்.
பாலர் வகுப்பு முதல், உயர்தரம் வரை காத்தமண் பாடசாலைகளில் படித்துவிட்டு, “எங்க உம்மா, வாப்பா காத்தான்குடி, ஆனா நான் படித்து வளர்ந்தது எல்லாமே கழம்புதான்” என்று ரீல் விடுபவர்கள் ஆயிரம் பேர் இன்றும் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இவர்கள் எதற்காக “காத்தான்குடி எனது ஊர்” என்பதை மறைக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதாகும்.
வெளிநாடுகளில் வாழ்பவர்கள், வெளியூர் ஆட்களுடன் சேர்ந்து வசிக்கும்போது இப்படி ரீல் விடுபவர்கள் இருக்கின்றார்கள்.
வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் தனித்திருந்து அல்லது மறைந்திருந்து, தான் செய்யும் பாவகாரியங்கள் எம்மவர்களைச் சென்றுவிடும், தனது மானம் போய்விடும் என்பதற்காகவும் இருக்கலாம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது.
மத்திய கிழக்கில் இருந்து வருபவர்களுக்கு அரபி வார்த்தைகளும், ஐரோப்பாவில் இருந்து வருபவர்களுக்கு ஆங்கில வார்த்தைகளும் இடைக்கிடையே வருவது தவிர்க்க முடியாதவை. இருந்தும் பெருமைக்காக “மொழி”யை உட்டடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அந்நிய மொழிகள் உட்புகுவதாலோ, “கழம்பு பாஷை”க்கு மாறுவதாலோ இங்கு தப்பு என கூறவில்லை. ஆனால் “எனது ஊர் காத்தான்குடி” என்பதை வெளியூர்களிலும், வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சிலர் மறைப்பதும், பின்னர் இவர்களின் குட்டு வெளிப்படுவதும் வெட்கித்தலைகுனிய வேண்டிய ஓர் விடயமாகும் என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.
பெருநாள் வாழ்த்துக்கள் அனுப்பிவைத்த அரசியல் பிரமுகர்கள், உள்ளுர் பிரமுகர்கள் மற்றும் எமது அன்பான வாசகர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் “ஈதுல் அழ்ஹா”-ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
-
நிர்வாகம்



Leave a comment