சண்டித்தனம் செய்யும் வர்த்தகர்களுக்கு ஒழுக்கம், பண்பாடுகளை கற்றுக் கொடுக்க சாய்ந்தமருது வர்த்தகர் சங்கம் முன்வருமா?

Sainthamaruthuசாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள சில நட்டாமுட்டிகளினால் முழு ஊருக்கும் அபகீர்த்தி ஏற்படுவதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான ஒரு செயற்பாடு காரணமாகவே கல்முனை மாநகர சபையில் கடந்த இரண்டு தினங்களாக கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. யாராக இருந்தாலும் ஒழுக்க வரையறைக்குட்பட்டு பேசவும் தர்க்கிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

அன்று சாய்ந்தமருது நகருக்கு ஆணையாளர் எந்த அடிப்படையில் வந்திருந்தாலும் சபை கலைக்கப்பட்டு, மேயர் இல்லாத சூழ்நிலையில் 24 மணி நேர கடமைக்குரிய விசேட ஆணையாளர் என்ற அந்தஸ்த்தில் அவர் இருப்பதனால் மாநகர சபைக்குட்பட்ட எந்தவொரு விடயத்திலும் எந்த நேரத்திலும் தலையிடுவதற்கு அவருக்கு முழுமையான உரிமை உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஒரு இடத்தில் நடு நிசியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டால் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான கட்டளை ஆணையாளரினால் விடுக்கப்படுகிறது. இது கடமை நேரம் இல்லை என்று சொல்லி விட்டு, தூங்கினால் யாராவது ஏற்றுக் கொள்வீர்களா?

சம்பவ தினத்தன்று சனிக்கிழமை அவர் கடமையதிகாரியாகவே இருந்துள்ளார். வாகன நெரிசல் மிக்க ஒரு பிரதான வீதியில் தனது கடைக்கு முன்னால் அனைத்து இடத்தையும் தனது சொந்த இடம் போன்று அந்த வர்த்தகர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அதற்கு அந்த வர்த்தகருக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை ஆணையாளரின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க முடியாது. இது அனைத்து பொது மக்களுக்கும் உரிய பிரச்சினையாகும். அந்த இடத்தில் வேறொரு பொது மகன் தனது வாகனத்தை பார்க் பண்ண முற்பட்டு, அந்த வர்த்தகர் அதற்கு இடமளிக்காமல் திட்டியிருந்தால் அதனை எப்படி எடுத்துக் கொள்வோம் என்று யோசித்துப் பாருங்கள்.

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கை என்பது ஒரு புனிதமான விடயம். அதனை தனது சுய லாபத்திற்காக பிரஸ்தாபித்து மக்களை பிரதேசவாத ரீதியாக திசை திருப்ப அந்த வர்த்தகர் முற்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக ஒட்டு மொத்த ஊரையும் அந்த வர்த்தகர் வம்புக்கு இழுத்து விட்டுள்ளார் என்பதே உண்மையாகும்.

இதனை நமது சாய்ந்தமருது வர்த்தகர் சங்கம் உணர்ந்து கொள்ளாமல் மாநகர ஆணையாளரை குற்றம் சாட்டியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மற்றோருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வர்த்தகம் சங்கம், முதலில் நமது வர்த்தகர்களுக்கு ஒழுக்கம், பண்பாடுகளை கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்..

  • எம்.பி.எம்.சம்சுதீன்
    சாய்ந்தமருது.

Published by

Leave a comment