ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,
பொறியியலாளர் முகமட் சிப்லி,
பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்,
மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு,
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்
காத்தான்குடி பிரதான வீதியில் அண்மைக்காலமாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாதசாரிகள் மற்றும் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கு பின்வரும் ஆலோசனைகளை “யுவர்காத்தான்குடி” தங்களுக்கு முன்வைக்கிறது.
1. பாதாசாரிகளை ‘குறுக்கு வழி’யாக வீதியைக் கடக்க முயற்சிப்பதைத் தவிர்த்து, அவர்களை பாதுகாப்பான முறையில்; வீதியைக் கடந்து செல்லக்கூடிய விதமாக பாதாசாரிகள் தடுப்பு வேலிகளை (Pedestrian Safety Railings/Fencing) பிரதான வீதியின் இரு பக்கத்திலும் அமைத்தல்.
இந்த பாதுகாப்பு வேலிகள் காரணமாக திடீரென வீதியில் பாயும் பாதசாரிகள், துவிச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், பெருமைக்காக பிளட்போர்ம்களில் மோட்டார் சைக்கிள் செலுத்தும் சட்ட விரோதிகள் ஆகியோரிடமிருந்து பாதுகாப்பைப் பெறல்.
2. பிரதான வீதியின் அதி உட்சபட்ச வேகமாக 20-30 kmp/h நிர்ணயித்தல்.
இவ்விதியை மீறுவோர் மீது போக்குவரத்துப் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்தும் போக்குவரத்துப் பொலிஸார் மோட்டார் சாரதிகளின் வேகத்தில் கண்காணிப்பை மேற்கொண்டிருத்தல்.
3. சிறுவயது அதாவது பாடசாலைக்குச் செல்லும் வயதில் இருந்து போக்குவரத்து விதிமுறைகளை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுடன், பாதுகாப்பாக வீதி ஒழுங்கைக் கடைப்பிடிபக்க அவர்களைப் பயிற்றுவித்தல்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் குழந்தைப் பருவத்தில் இருந்தே வீதி ஒழுங்கு முறைகள் இவ்வாறு பயிற்றுவிக்கப்படுவதால், போக்குவரத்து ஒழுங்குகள் அங்கு அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு, விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன.
4. பாதசாரிகள் பிரதான வீதியைக் கடந்து செல்லும் இடத்தை மென்மேலும் பாதுகாப்பாகவும், தெளிவாகவும் அமைத்தல்.
5. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய அனைத்து சந்திகளிலும் போக்குவரத்து சமிக்கை விளக்குகளை நிறுவுதல்.
இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள மேற்படி ஐந்து விடயங்களையும் உடனடியாக மேற்கொண்டால் தொடர்ந்து எமது பிரதான வீதியில் இடம்பெற்றுவரும் தொடர் விபத்துக்களை இன்ஸாஅல்லாஹ் விரைவில் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
நன்றி,
யுவர்காத்தான்குடி





Leave a comment