- புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
காத்தான்குடி: கடந்த 17ம் திகதி இரவு காத்தான்குடி ரெலிகொம் வீதி வர்த்தக நிலையத்தில்தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய காத்தான்குடி அல்அமீன் வீதியைச் சேர்ந்த காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் எம்.ஆர். றிஜானை, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வளர்ச்சி நடவடிக்கைச் செயற்பாட்டாளர் எம்.எஸ்.எம். ஷாபி நேற்று (23) நண்பகல் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டார்.
இச்சிறுவனுக்கு ஏற்பட்ட தாக்குதல், சிகிச்சைகளின் முன்னேற்றம்,
பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகள் குறித்து ‘வார உரைகல்’ பிரதம உதவி
ஆசிரியர் ஏ.எல். முஹம்மது நியாஸ் அவருக்கு எடுத்துரைத்தார்.
சிறுவன் றிஜானிடம், ‘உங்களுக்கு என்ன நடந்தது? உங்களை மின்சாரம்
தாக்கியதா? அல்லது உங்கள் மீது அசிட் வீசப்பட்டதா?’ என்று அவர்
வினவியபோது; ‘எனது தலையிலும் விலாவிலும் பொல்லால் அடித்தார்கள்’ என்று
மாணவர் றிஜான் அவரிம் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
அலுவலகத்தில் இச்சிறுவனின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து,
சம்பவம் நிகழ்ந்து ஒரு வார காலத்தின் பின் இன்று நண்பகல் அளவில் பொலிசார்
ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
அத்துடன் இன்று மாலையில் காத்தான்குடி நியூஸ் பெஸ்ட்’ இணையதள நிர்வாகியான
ஊடகவியலாளர் எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ் மற்றும் ”லங்கன்வொய்ஸ்” இணையதள
நிர்வாகியான ஊடகவியலாளர் தீன் பைரூஸ் ஆகியோரும் வைத்தியசாலைக்குச் சென்று
சிறுவன் றிஜானைப் பார்வையிட்டனர்.
அவர்களிடமும் ”தான் பொல்லொன்றினால் தாக்கப்பட்டதாகவே சிறுவன் றிஜான்
தெளிவாகத் தெரிவித்ததாக டீன் பைரூஸ் கூறினார்.


Leave a comment