ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்

  • புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

unpகாத்தான்குடி: ‘ஐக்கிய தேசியக் கட்சியை எமது காத்தான்குடிப் பிரதேசத்தில் வழி நடாத்திய அமைப்பாளர்களும், ஐ.தே.கட்சியுடன் கூட்டிணைந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் காலங்களில் மாத்திரம் இக்கட்சியின் ஆதரவாளர்களை உஷாராக்கி அவர்களை பிரச்சாரப் பணிகளிலும், வாக்கு வேட்டையிலும் ஈடுபடுத்திய பின்னர் அவர்களை முற்றாக மறந்து ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு, அமைப்பாளர்கள் தமது சொந்தத் தேவைகளையும், கூட்டிணைந்த கட்சிகள் தத்தமது கட்சிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களின் தேவைகளையும் ஐ.தே.கட்சியின் மேலிடத்தோடும், அமைச்சர்களோடும் தொடர்பு கொண்டு நிறைவேற்றிக் கொண்டதே இப்பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் உண்மையான ஆதரவாளர்கள் பிளவு படுவதற்கும், கட்சியில் விசுவாசத்துடன் இணைந்து செயற்படுவதற்கும் ஆர்வத்துடன் முன்வராமல் ஒதுங்கியிருப்பதற்கு காரணமாகும்.’

‘எனவே, இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்களால் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் எம்.எஸ்.எம். ஷாபி அவர்களின் முன்னிலையில் தெரிவாகியுள்ள ஐ.தே.கட்சியின் இப்பிரதேச மத்திய குழு நிர்வாகமானது, முதலில் இப்பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் வெற்றிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு தியாகங்களுடன் பாடுபட்டு உழைத்து, இன்று விரக்தியடைந்து மறைந்தும், ஒதுங்கியும் வாழுகின்ற கட்சியின் ஆதரவாளர்களை இனங்கண்டு உள்வாங்குவதிலும், அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை கட்சியின் தலைமைப்பீடத்தின் கவனத்திற்குச் சமர்ப்பித்து முடிந்தளவான நிவாரணங்களை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதிலும் முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டும்.’

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் உப தலைவரும், முன்னாள் கிராம உத்தியோகத்தருமான அல்ஹாஜ் எம்.எஸ். உமர்லெப்பை ஜே.பி. தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இக்கருத்தினை நிர்வாகத்தினர் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இதுதொடர்பாக பின்வரும் தீர்மானமொன்றும் எடுக்கப்பட்டது.

umar lebbe unp
அல்ஹாஜ் எம்.எஸ். உமர்லெப்பை ஜே.பி.

கடந்த காலங்களில் காத்தான்குடி மத்திய குழுவின் செயற்பாட்டுப் பிரதேசத்தில் ஐ.தே.கட்சியின் சார்பில் நேரடியாகப் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட அஹமட் லெப்பை சின்னலெப்பை (1947 மற்றும் 1952 தேர்தல்கள்), அல்ஹாஜ் ஏ.எச். மாக்கான் மாக்கார் (1960 மற்றும் 1970 தேர்தல்கள்), அல்ஹாஜ் அப்துல் லத்தீப் சின்னலெப்பை (1965 தேர்தல்), அல்ஹாஜ் டாக்டர் எம்.எல். அகமட் பரீத் (1977 தேர்தல்), அலிசாஹிர் மௌலானா (1994 மற்றும் 2000 தேர்தல்கள்) போன்றவர்களுடனும், ஐ.தே.கட்சியினால் மாற்று உறுப்பினராக நியமிக்கப்பட்ட மர்ஹும் அல்ஹாஜ் ரிஸ்வி சின்னலெப்பை அவர்களுடனும் கட்சியின் வெற்றிக்காகப் பாடுபட்டு தற்போது விரக்தி நிலைகொண்டு ஒதுங்கியும், கூட்டுக்கட்சிகளின் புறந்தள்ளல்களால் ஓரங்கட்டப்பட்டும் இருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், வாக்குச்சாவடிகளிலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் கட்சியின் முகவர்களாகச் செயற்பட்டவர்கள் மற்றும் கட்சியின் வட்டாரக் கிளைகள், இளைஞர் அணிகள், மாதர் பிரிவுகளில் அங்கத்துவம் பெற்றிருந்தவர்கள் அனைவரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இக்கட்சிக்கான தங்களது முன்னாள் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் தொடர்பாக தகவல்களைத் தெரிவிக்குமாறு ஊடகங்கள் மூலம் கேட்டுக் கொள்வது என அத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

தொலைபேசி இலக்கங்கள்: தலைவர்: 077 990 4524 / செயலாளர்: 077 975 7154

Published by

Leave a comment