கொழும்பு: இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியில் சுமார் 8 வருடங்களுக்கு முன் வைக்கப்பட்ட 3 தொன் மீன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
கடறறொழில் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக பணியாற்றும் எஸ்.பாலசுப்பிரமணித்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ,
மீனவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மீன்களை பகிர்ந்தளிக்காது கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியில் வைத்திருந்து கூட்டுத்தாபனத்துக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்திய நபர் அல்லது நபர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அவ்விசாரணை அறிக்கையின்படி தனிநபர் அல்லது குழுவொன்று இதற்கு தொடர்புடையதாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடமிருந்து கடற்தொழில் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை மீளபெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் கடந்த காலங்களில் அதிகளவு நிதி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. ஊழியர்களுக்கான சம்பள பணத்தை செலுத்துவதற்காக 210 மில்லியன் ரூபாவையும், கடற் தொழில் கூட்டுத்தாபனத்தின் கடன் தொகையை செலுத்துவதற்காக 430 மில்லியன் ரூபாவையும் திறைசேரியிலிருந்து பெற்றுக்கொண்டுள்ளது.
கடற்தொழில் கூட்டுத்தாபனம் இந்தளவுக்கு பலவீனமடைவதற்கு காரணம் முகாமைத்துவத்தில் காணப்பட்ட குறைப்பாடுகளாகும்.எனவே தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலையீட்டுடன் இத்தகைய நிறுவனங்களை மீள் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
– வசந்தா அருள்ரட்ணம்
Published by

Leave a comment