மும்மன்ன கிராமத்துக்கு STF பாதுகாப்பு வழங்குக! பள்ளி நிர்வாகம் அவசர வேண்டுகோள்

  • என் ஹஸன்

army presidential securityகுருநாகல்: குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள் மும்மன்ன கிராமத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று மாலை உரையாற்றவுள்ள நிலையில், இது அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும் மார்க்க சொற்பொழிவை காரணம் காட்டி அதை பொலிஸார் நிராகரித்துள்ளனர். ஆகவே, மும்மன்ன கிராமத்துக்கு இன்றைய தினம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பை பெற்றுத் தருமாறு மும்மன்ன மஸ்ஜிதுல் ரஹ்மானியா பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது கவனத்துக்கு கொண்டு சென்ற போதிலும் இன்றைய தினம் மாலை நடைபெறவுள்ள நிகழ்வை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

இதனால் முஸ்லிம் கிராமத்தை ஊடருத்து பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன், கொடிகளும் ஏற்றப்பட்டுள்ளன. இது அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்தில் இந்த விடயம் தொடர்பாக சமரசப் பேச்சுக்கள் நடைபெற்றன. இதன் போது மார்க்க சொற்பொழிவு காரணம் காட்டி அதை தடைசெய்ய முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். அது மட்டுமல்லாது இன்று காலை முதல் கிரிஉல்ல பொலிஸ் நிலையத்திலிருந்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரம்பம் முதல் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதானல் தொடர்ந்து அவர்களை எம்மால் நம்ப முடியாதுள்ளது.

ஆகையினால், விசேட அதிரடிப் படையின் பாதுகாப்பை வழங்குமாறு கோரியிருந்த போதிலும் இன்றும் அவர்கள் கடமையில் அமர்த்தப்படவில்லை. இதனால் அவசரமாக மும்மன்ன கிராமத்துக்கு விசேட பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். என பள்ளி நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment