அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது
கொழும்பு: இந்தியாவின் அழுத்தங்களால் தான், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டியேற்பட்டது என்ற உண்மையை, தற்போதைய அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில், இடைநிறுத்தப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ள போதிலும், இதுவரை அந்தப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்த துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தான், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இந்தியாவின் அழுத்தங்களால் தான் இந்தத் திட்டத்தை இடைநிறுத்த நேரிட்டது என்று கூறியிருக்கிறார்.
சீனாவின் முதலீட்டில் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியா தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. அந்த எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளாமல் மஹிந்த ராஜபக்ச, இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததால் தான், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தன.
இதனை மனதில் வைத்துக் கொண்டே, இந்தியப் புலனாய்வுத்துறை மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகப் பணியாற்றியிருந்தது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஒரு பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குள்ளாகவே, துறைமுக நகரத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்த உத்தரவிட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் இரண்டாவது வாரத்தில் மேற்கொண்ட பயணத்துக்கு ஒருவாரம் முன்னதாகவே துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் அழுத்தங்களின் பேரில் அல்லது இந்தியாவைத் திருப்திப்படுத்தும் நோக்கில் தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்த போதிலும், அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
சுற்றுச்சூழல் காரணிகளைக் கருத்தில் கொண்டே துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியதாக காரணம் கூறியது அரசாங்கம். அதற்கேற்ப, சுற்றுச்சூழல் அறிக்கையும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டத்தை இடைநிறுத்தியதால், சீனாவின் ஒட்டுமொத்த திட்டங்களும் முடங்கிப் போகும் ஆபத்து ஒன்று ஏற்பட்ட நிலையிலும், இலங்கையின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு சீனாவின் தயவு தேவை என்று உணரப்பட்ட நிலையிலும் தான், கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகால மௌனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சீனாவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை.
Published by

Leave a comment