டெல்டா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் தம்பதி

  • AF-90

deltaபரீஸ்: அமெரிக்காவை சேர்ந்த முஸ்லிம் தம்பதி சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்படுவதாக விமான பணிப் பெண் கூறிய புகாரையடுத்து அவர்கள் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டு தலைநகர் பரீசிலிருந்து அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்திலுள்ள சின்சின்னாடி விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பவிருந்தது. அவ்விமானத்தில் பைசல் அலி மற்றும் அவரது மனைவி நசியா ஆகியோர் தங்களது இருக்கையில் அமர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டிருந்தனர். நசியா தனது பெற்றோருக்கு தாங்கள் புறப்பட்ட தகவலை எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்தார்.

திடீரென விமான பணிப்பெண், விமானியிடம் ஓடிச்சென்று அந்த தம்பதிகள் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பரீஸ் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தம்பதியை கீழே இறங்க சொல்லியுள்ளனர். ஏன் என்று கேட்டதற்கு, விசாரிக்க வேண்டும் என்று பதில் வந்துள்ளது.

இதையடுத்து தம்பதி இறங்கியதும் விமானம் சென்றுள்ளது. இதனால் பைசல் அலியும், நசியாவும் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர்கள் தங்களது 10வது திருமண ஆண்டை கொண்டாட பரீஸ் வந்ததாகவும், தாங்கள் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிப்பவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

delta
டெல்டா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட முஸ்லிம் தம்பதி

அவர்கள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு, சந்தேகப்படும்படியான நபர்கள் இல்லை என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்தனர். இதுகுறித்து அறிந்த முஸ்லிம் அட்வோகசி குரூப், அமெரிக்க போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவித்துள்ளது.

டெல்டா விமான சேவை நிறுவனம் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, தினமும் பல ஆயிரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் தங்கள் விமான சேவை நிறுவனம், ஒருபோதும் மதம், இனம், ஜாதி பார்த்து பயணிகளிடம் பாரபட்சம் காட்டுவதில்லை என்றும், நடந்த தவறு பற்றி விசாரிப்பதாகவும், டிக்கெட் பணத்தை முழுமையாக திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளது.

தம்பதிகள் குறித்து புகார் தெரிவித்த பணிப்பெண் கூறுகையில், நசியா தனது முகத்தை திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்தார். எஸ்எம்எஸ் அனுப்பினார். ஏசி போடப்பட்டிருந்த நிலையிலும், பைசல் அலியின் உடல் வியர்த்தபடி இருந்தது. அவர்கள் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையை உச்சரித்தனர். இதையெல்லாம் இணைத்து பார்த்ததும் பயந்து போய் புகார் கூறிவிட்டேன் என்றார்.

பரீசில் சமீபகாலமாக தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், யாரைப் பார்த்தாலும் சந்தேகிக்கும் ஒருவகை ‘போஃபியா’வில் மக்கள் சிக்கியுள்ளதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

Published by

Leave a comment