கொழும்பு: மாகாண சபைத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரணதுங்க ஆகிய மூவரையும் ஒரே மேடையில் கொண்டுவரும் எமது கனவு இனிமேலும் மெய்படும் என்ற நம்பிக்கை தனக்கு இல்லையென அதன் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.
சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் கை நழுவி சென்றுள்ளபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுசேர்க்கும் முயற்சியினை தாங்கல் இதுவரை கைவிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“நாம் பொறுத்தது போதும். தீர்மானம் எடுப்பதற்கு இதுவே சரியான தருணம், எனினும் இத்தீர்மானத்தால் கட்சி பிரிவடைந்து விடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்” என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார். “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீல. சு. க வை பிரிக்க வேண்டுமென்ற எண்ணம் நிச்சயமாக இருக்காது. என்றபோதும் அவருடன் இருக்கும் கோஷ்டியினரின் அழுத்தங்களால் அவர் கட்டுப்பட்டுள்ளார். இக்கும்பல் எரிச்சல் மற்றும் குரோத மனப்பான்மைக் கொண்டது.
இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாடம் புகட்டுவதற்காக ஸ்ரீல. சு. க வில் இருந்தபடி அரசாங்கத்துடன் இணைவதற்காக டீல் போட்டிருந்தார்கள். ஆறு அமைச்சர் பதவிகள், இரண்டு இராஜாங்க அமைச்சர் பதவிகள் மற்றும் 03 பிரதி அமைச்சர் பதவிகளே அவர்களது ‘டீல்’ ஆகும். இதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை அம்பலப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை. எமக்கு கட்சி முக்கியத்துவம் என்கின்றபோதும் அரசாங்கம், நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றை கருத்திற்கொண்டு எமது கட்சியின் மத்திய செயற்குழு அதனை மறுத்துவிட்டது” என்றும் அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.
Published by


Leave a comment