சங்கை பொருந்திய ரமழான் எம்மைவிட்டும் கடுகதியில் பிரிந்திவிட்டது. முஃமினுக்கு ரமழானின் பிரிவு, பெருநாளை அடுத்துவரும் ஓரு சில தினங்களுக்குக் கவலையாகவே இருக்கும்.
தனது குடும்பத்தின் வறுமை, தனது சகோதரனின் கல்வி, அயல்வீட்டுக்காரனின் பசியின் கொடுமை என்று எமது ஊரும் சமூகமும் தவிக்கின்றது.
தலைக்குமேல் கடன்சுமை காரணமாக காத்தான்குடியின் ‘அரை’வாசி வீடுகளின் உறுதிப்பத்திரமும், நங்கைகளின் நகைகளும் வங்கிகளில் வட்டிக்கு ஈடுவைக்கப்பட்டிருக்கின்றன.
கால்வாசி வீடுகள் மற்றும் நிலையான சொத்துக்களின் பத்திரங்கள் அயல் சகோதர இனத்தவர்களின் வட்டித் தொழிலாளர்களிடம் அடகுவைக்கப்பட்டிருக்கின்றன.
கடன் சுமை ‘தலைக்குமேல்’ ஏறி, சுமார் 25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் மன நோயாலும், மன உளைச்சலாளும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தேவையற்ற உணவு, மிதமிஞ்சிய ஆடம்பரம் காரணமாக 79 வீதத்துக்கும் அதிகமானவர்கள் நிரந்தர நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.
கஞ்சா, மதுபானம் மற்றும் போதைவஸ்து காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்களில் பிரச்சினைகள் வெடித்து, காதிக்கோட்டிற்குச் செல்லாமலேயே விலகிவாழும் பரிதாபம் எங்கள் சமூகத்தில் இருக்கிறது.
கள்ளத்தொடர்பு, காதல், சினிமா கலாச்சாரம் ‘தலைக்கடித்து’, பைத்தியம்போல் அலைகின்றனர் சிறுபராயத்தினர். பல குடும்பங்களும் சீரழிந்திருக்கின்றன.
போக்குவரத்து விதிகளை மதிக்காத இளைஞர்களும், சிறுவர்களும் தனது மரணத்தை எதிர்பார்க்காவிட்டாலும், அடுத்தவர்களின் உயிரோடு விளையாடி வருகின்றனர். பெற்றோர்களே முன்வந்து, இச்சிறுவர்களை மோட்டார்சைக்கிள் ஓடுவதற்கு அனுமதிக்கும் போது, இதைவிட சட்டமீறல் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
கஸ்டப்பட்டு நாலுபணம் சம்பாதிக்கும் உழைப்பாளிகளிடமிருந்து கறந்தெடுக்கப்படும் வாடகைப்பணம் மற்றும் ‘ஆயக்காசு’களை, தறாவீஹ் தொழுகைக்கு வருபவர்களுக்கு தேநீரும், சமூசாவும் கொடுத்து, இருபத்தேழில் சாப்பாடும் வழங்கி வீண் விரயமாக்கிய பள்ளிவாயல்களின் நிர்வாகிகளின் மடமைகளை என்னவென்று இங்கு சொல்ல!
‘மழைகாலத் தவளைகள்’ போல் எமது ஊர் சகோதரர்களின் சமூகவலைத்தள பதிவுகள் காணப்படுகின்றன.
பெட்டிக்கடைபோன்று சமூகவலைத்தளங்களில் தன் இஸ்டத்திற்கு மார்க்கத்தை அளக்கும் அறிவாளிகளின் இழிசெயல்களும், ‘பெடியன்மார்’களின் கூஜா தூக்கலும் நாறிப்போய்க் கிடக்கு.
பிறையுடன் ஆரம்பித்த ரழழான் பிரச்சினை, 4 திடல்களாய்ப் பிரிந்து பெருநாள் கொண்டாடியவுடன் நிறைவுக்கு வருகிறது.
இனி….
அரசியல்வாதிகளும், கட்சிகளும் சமூகவலைத்தளங்களில் ஹைலைட்டாக இருக்கும். அல்லது கிரிக்கட் போட்டி கிளைமகஸ் ஆக இருக்கும்.
மனநோயாளிகள் பலரை முகநூல் அடையாளப்படுத்திவிட்டது!
முஸ்லிம்களின் முதுகில் குத்தும், ஒபாமா பெருநாள் வாழ்த்துச் சொன்னார், டேவிட் கமரன் பெருநாள் வாழ்த்துச் சொன்னார் என்று தனது அறியாமையைப் பகிர்வதை தவிர்த்து, நான் தனது அயல்வீட்டு சகோதரனுக்கு ஈத் முபாறக் சொன்னமா என்பதை மனச்சாட்சியிடம் கேட்டுப்பார்க்க வேண்டும்
குறிப்பு: எமக்கு நேரகாலத்தோடு பெருநாள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பிவைத்த எமது நாட்டின் அரசியல்வாதிகள், ஊர்ப்பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றிகள். தவிர்க்க முடியாத காரணங்களால் பெறுமதிமிக்க தங்களது பெருநாள் வாழ்த்துச் செய்திகளை பிரசுரிக்க முடியவில்லை என்பதை கவலையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
“ஈத் முபாறக்”
என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்,
யுவர்காத்தான்குடி

Leave a comment