- புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
மட்டக்களப்பு: ஜனநாயகக் கட்சியின் தலைவரும், பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐ.தே.கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம். சாபிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் எம். ஹாசீமால் வழங்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழு 05.07.2016 அன்று நடாத்தவுள்ள இப்தார் நிகழ்வின்போது விரிவாக ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுப்பதாக (03.07.2016) மாலை நடைபெற்ற மத்திய குழுவின் விஷேட செயற்குழுக் கூட்டத்தில் தீர்;மானக்கப்பட்டது.
ஐ.தே.கட்சியின் மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார் தலைமையில் இன்று மாலை ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபாவின் இல்லத்தில் நடைபெற்ற இவ்விஷேட செயற்குழுக் கூட்டத்தில் மேற்படி கடிதம் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதைத் தொடர்ந்தே, மத்திய குழு உறுப்பினர்கள் 40 பேர் பங்கேற்கவுள்ள இப்தார் நிகழ்வில் இக்கடிதம் தொடர்பாக இறுதி முடிவினை எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இப்தார் நிகழ்வினை கொத்தணி அமைப்பாளர் எச்.எம்.எம். முஸ்தபாவின் இல்லத்தில் நடாத்துவதாகவும் தீர்மானம் எடுக்க்கப்பட்டது.
ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் எம். ஹாசிம், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ்.எம். சாபிக்கு கடந்த 2016.06.27ம் திகதி வழங்கிய கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு:
மொஹமட் ஷாபி ஐயா அவர்களுக்கு,
நீங்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்று எம்முடன் இணைந்து கொண்டதையிட்டு நானும், எமது கட்சியினதும் மகிழ்ச்சியை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு, சட்டதிட்டங்கள் மற்றும் கட்சியின் நோக்கங்களின் பெறுமதி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு நீங்கள் அங்கத்தவர் என்ற ரீதியில் எம்முடன் சேர்ந்து கொள்கின்றீர்கள். கட்சியின் அங்கத்துவத்திற்கு மேலதிகமாக, கட்சியினால் ஒப்படைக்கப்படுகின்ற பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக உழைப்பீர்கள் எனவும் நான் நம்புகின்றேன். அத்துடன் இதற்கான சக்தி, தைரியம் ஆகியன உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.
எதிர்காலத்தில் தேர்தல் நடாத்தும் விதிமுறையை திருத்தம் செய்வதற்காக அல்லது புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அநேகமாக இடமுண்டு. அத்துடன் எமது கட்சியில் தேர்தல் வேட்பு மனுவைப் பெற்றுக் கொடுக்கும் முறையிலும் மாற்றங்கள் ஏற்படும். அதற்கமைவாக நீங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது அங்கத்தவராக இணைந்ததுமே எதிர்காலத் தேர்தல்களின்போது வேட்பு மனு கோரும் சந்தர்ப்பங்களில் நீங்கள் வசிக்கும் மாவட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம அளவிலான சந்தர்ப்பம் உங்களுக்கும் உரித்தாகும்.
மேலும் கட்சியின் அங்கத்தவர் என்ற ரீதியில் நீங்கள் பிரதிநிதித்துவம் வகிக்கும் மாவட்டத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறிமுறைகளைச் செயற்படுத்துவதற்கும் இத்துடன் தங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. நீங்கள் சிறந்த அரசியல் அனுபவங்களுடனான ஒருவராக இருப்பின் அல்லது ஏற்கனவே ஒரு மக்கள் பிரதிநிதியாக இருப்பின் அல்லது அந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு உங்களை மாவட்ட அமைப்பாளராக நியமிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதனையும் அறிவிப்பதற்கு விரும்புகின்றேன்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள உங்களுடைய அரசியல் எதிர்காலம் ஒளிமயமாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு
அன்பின்
கௌரவ கபீர் ஹாஷீம் (பா.உ)
பொதுச் செயலாளர்
ஐக்கிய தேசியக் கட்சி

Leave a comment