- எம். எச். எம். அன்வர்
காத்தான்குடி: தற்போது எமது பிரதேசத்தில் பெருநாள் இரண்டாக கொண்டாடப்படுகின்றது இது இஸ்லாத்தில் இல்லாத ஒருவிடயமாகும். இதற்காக ஊடகங்கள் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு சவூதிஅரேபிய நஜ்ரான் பல்கலைக்கழக இணைப்பேராசிரியரும் தாருள் ஹதீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான மௌலவி கலாநிதி அஹமட் அஷ்ரப் தெரிவித்தார்.
நேற்று காத்தான்குடியில் காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்களுக்கும் தாருள்ஹதீஸ் நிறுவனத்திற்குமிடையே இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்,
ரஸூல் (ஸல); அவர்களின் காலத்தில் கூட தெளிவாக பிறை விடயத்தில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பெருநாள் கொண்டாடுவார்கள். இது தொடர்பில் உலமாக்கள் மத்தியில் ஏகோபித்த முடிவுள்ளது. இதற்கு மாற்றமாக சர்வதேச பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவதானது பிழையானதொரு நடை முறையாகும்.
சவூதி அரேபியாவில் நாங்கள் சர்வதேச பிறையின் மூலம் நாம் பெருநாள் கொண்டாடவோ இலங்கையில் முதல் நாள் பிறை கண்டுவிட்டோம் எனக் கூறி அரபாவை முற்படுத்தவோ முடியாது. ஆகவே அதன்படிதான் பெருநாள் கொண்டாடலாம் எனக் கூறவும் முடியாது. அங்கேயுள்ள சட்டதிட்டம் கட்டுப்பாட்டின்படியே செய்யமுடியும் இதை அங்கே கூறினால் கசையடிதான் கிடைக்கும்.
நான் ஒரு பெருநாள் எனது மகன் ஒரு பெருநாள் மகள் ஒரு பெருநாள் இது இஸ்லாத்தில் இல்லாததொன்று.கூட்டாக எடுக்கப்படும் தீர்மானத்திற்கு நாம் கட்டுப்பட வேண்டும். இதனால் எமதுநோன்பு பாதிக்காது. எதையும் நடுநிலையாகவே பார்க்கப்பட வேண்டும்.
இதற்கு ஊடகங்கள் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு ஒற்றுமைப்பட்ட சமூகமாக மார்க்கத்தில் நிலைத்து நிற்கக் கூடியதாக மாற்றியமைக்க பாடுபட வேண்டும். இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.
மேற்படி ஊடக மாநாட்டுக்கு தாளுள் ஹதீஸ் நிறுவன உறுப்பினர்களான அஷ்ஷெய்ஹ் எம் சீ எம் றிஸ்வான் மதனி, அஷ்ஷெய்ஹ் எம் ஜ எம் பஷீர் மதனி, நிருவாக செயலாளர் அஸ்மி தாஜூதீன், மற்றும் மீடியா போர பிரதித்தலைவர் பஸால் ஜிப்ரி செயலாளர் எம் எச் எம் அன்வர் பொருளாளர் எஸ் ஏ கே பளீலுர் ரஹ்மான் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் எஸ் எம் நூர்தீன் உட்பட போரத்தின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டதுடன் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment