கொழும்பு: பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களின் மத, கலாசார உரிமைகள் உறுதிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லா உறுதியளித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சந்திப்பொன்று பல்கலைக்கழக மானிய ஆணையகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் துனைத் தலைவரான பேராசிரியர் மொஹான் டி சில்வா, வர்த்தக கைத் தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதின் , துனை வேந்தர்கள் . பேராசிரியர்கள் மற்றும் முஸ்லிம் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தெற்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஐந்து வேளை தொழுகையில் ஈடுபட பிரத்தியேக தொழுகை அறை வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும் .
வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் ஜும்மா தொழுகையில் ஈடுபடுவதற்காக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை பரீட்சைகள் மற்றும் பாட நெறிகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் .
போன்ற கோரிக்கைகள் குறிப்பாக மாணவ பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்ட போது இது தொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணையகத்தினால் சுற்றறிக்கை அனுப்பி வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
களனி மற்றும் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான பீடத்தில் முதலாம் ஆண்டு விரிவுரை தனிச் சிங்களத்தில் நடைபெறுவதால் தமிழ் – முஸ்லிம் மாணவர்கள் எதிர்கொள்ளும் மொழி ரீதியான பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் மாணவ பிரதிநிதிகளால் சுட்டிக் காட்டப்பட்ட போது, மொழி பெயர்ப்பு வசதியளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என பல்கலைக்கழக மானிய ஆணையகத்தின் துனைத் தலைவரால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பீட முஸ்லிம் மாணவிகள் கலாசார ரீதியான ஆடை அணிதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுகாதார அமைச்சருடன் பேசி தீர்வை பெறுவதற்கும் இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Published by


Leave a comment