-
பா.திருஞானம்
நுவரெலியா: கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட 644 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கும் நிகழ்வு (25.06.2016) நுவரெலியா நடைபெறவுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் எல்.அய்.சீ (LIC) காப்புறுதி நிறுவனத்தின் அனுசரணையுடன் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை (25.06.2016) காலை 8.30 மணிமுதல் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக எல்.அய்.சீ காப்புறுதி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தமித் எம் பதிரராஜ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
இலங்கையில் செயற்படுகின்ற காப்புறுதி நிறுவனம் என்ற வகையில் நாங்களும் கல்விக்கு கைகொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.அந்த வகையில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க நாங்கள் இந்த செயற்பாட்டிற்காக அனுசரணையாளர்களாக செயற்படுகின்றோம்.இந்த திட்டத்தின் மூலமாக நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்,சிங்கள மொழி மூலம் 5 ஏ சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 644 பேருக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
5ஏ சித்திகள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் 196 பேருக்கும் 6ஏ சித்திகள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் 156 பேருக்கும் 7 ஏ சித்திகள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் 116 பேருக்கும் 8 ஏ சித்திகள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் 92 பேருக்கும் 9 ஏ சித்திகள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் 84 பேருக்கும் இந்த சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நுவரெலியா கல்வி வலயம்,வலப்பனை,கொத்மலை,ஹட்டன்,ஹங்குரன்கெத்த ஆகிய ஜந்து கல்வி வலயங்களில் இருந்து கல்வி அமைச்சின் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.இவர்கள் அனைவரும் 526 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.இதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் மத்தியில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியெய்துவது தொடர்பான உற்சாகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாகும்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொள்ளவுள்ளார்.இவருடன் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் மகிந்த தொடம்பே கமகே,எமது எல்.அய்.சீ காப்புறுதி (டுஐஊ) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜே.சென்,பொது முகாமையாளர் அரவிந்தர் சிங் மற்றும் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களும் கல்வி அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.
மாணவர்களை ஊக்குவிக்கின்ற அதேவேளை 91 பாடசாலை அதிபர்களுக்கும் விசேட விருதுகள் வழங்கப்படவுள்ளன.அதே நேரத்தில் கல்வி வலயங்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களை மேலும் அதிகரிப்பதற்கும் எமது நிறுவனம் எதிர்பார்க்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment