காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களின் சரித்திரம் மற்றும் அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்புக்களை நினைவு கூறும் வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் பூர்வீக நூதனசாலை (மியூசியம்) இன்று 15-04-2015 புதன்கிழமை மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
இதனை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், தற்போதய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் ஆகியோர் அங்குரார்ப்பனம் செய்து வைத்தனர்.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இவ் அங்குரார்ப்பன நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பாக்கீர் உட்பட ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
முழு இலங்கையினையும் மையமாகக் கொண்டு காத்தான்குடி பிரதான வீதியில் நான்கு மாடி அழகிய கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள இவ் நூதனசாலையில் (மியூசியத்தில்) இஸ்லாமியர்களின் பண்டைய வாழ்க்கை முறைகள், கலாசார நடைமுறைகள், அவர்களால் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய உபகரணங்கள் மற்றும் இஸ்லாமியர்களின் உருவாக்கங்கள் பற்றிய விடயங்களை இலகுவாக எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்;கு வாய்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த பூர்வீக நூதனசாலையை நிறுவுவதற்கு முன்னாள் பிரதியமைச்சரும்;, இந் நூதனசாலையின் ஸ்தாபகருமான பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளில் கலாசார மரபுரிமைகள் அமைச்சும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் நிதி உதவிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment