பெபலியான பெசன் பக் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுக்கும் கண்டன அறிக்கை

pmgg logo.PMGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: கடந்த 28.03.2013ம் திகதியன்று கொழும்பு புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பெசன் பக் பெபலியான கிளை மீது இனவாத காடையர் கும்பல் ஒன்றினால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவத்தினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

15 வயதான சிங்கள யுவதியொருவர் இவ்வியாபார தளத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார் என்ற சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கும்பல் இத்தாக்குதலை ஆரம்பித்திருக்கின்றனர். இருந்த போதிலும் இக்குற்றச் சாட்டானது அப்பட்டமான பொய்யென்றும் அவ்வாறான எந்த சம்பவங்களும் பெஷன் பக் நிறுவனத்தில் நடைபெறவில்லை எனவும் பொலிசாரே இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இவ்வினவாதத் தாக்குதலுக்கான உண்மையான காரணம் இந்நிறுவனம் ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு சொந்தமானது என்பதுவும் அண்மைக்காலமாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிரான பொது பல சேனா, சிங்கள ராவய மற்றும் ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புகளினால் தூண்டிவிடப்பட்டுள்ள பொய்ப்பிரச்சாரங்கள் மற்றும் இனவாத செயற்பாடுகளுமேயாகும்.

இதற்கு ஆதாரமாக கடந்த 18.03.2013 அன்று கண்டியில் இடம்பெற்ற பொது பல சேனாவின் கூட்டத்தில் உரையாற்றிய பொது பல சேனாவின் செயலாளரான கலபட அத்தே ஞானசார தேரர் பெசன் பக் போன்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான தொழில் நிலையங்களில் வைத்து சிங்கள யுவதிகள் மதமாற்றம் செய்யப்படுவதாகவும் இன்னும் பல இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் சாதாரண மக்களின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசியதோடுஇ தான் இவ்வாறு உரையாற்றுவதால் யாரும் பெசன் பக் நிறுவனங்களின் மீது கல்லறிந்து இந்நிறுவனங்களை சேதப்படுத்தி விடக் கூடாது எனவும் சூட்சுமமான முறையில் இந்நிறுவனங்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டும் வகையில் உரையாற்றியிருந்தார்.

எனவே இத்தாக்குதலானது யதார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல எனவும் மிக திட்டமிடப்பட்ட முறையிலேயே இனவாத அடிப்படையிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுவும் மிகத்தெளிவாக புரிகின்றது. கடந்த வாரங்களில் இத்தகைய இனவாதக்கும்பல்களினால் முஸ்லிம் வியாபார நிறுவனங்களில் புத்தாண்டுக்கான கொள்வனவுகளை சிங்களவர்கள் மேற்கொள்ள வேண்டாம் என குறுஞ் செய்தி மூலம் விசமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு ஒரு சில தினங்களிலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது.  இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இவ்வருட முற்பகுதியில் இது போன்ற இனவாத எதிர்ப்புப்பேரணி ஒன்று சிங்கள ராவய எனும் அமைப்பினால் மஹரகம நோலிமிட் நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்டடிருந்தமையும் இத்தாக்குதலுக்கான பின்னணி எதுவென்பதை தெளிவாக்குகின்றது.

இருப்பினும் பொலிஸ்த் தரப்பினரும் அரச ஊடகங்களும் இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துகளும் அறிக்கைகளும் விசனத்துக்குரியவையாகும். இது ஒரு தனிப்பட்ட காதல் தகறாறு காரணமாக அல்லது வியாபார போட்டி காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இப்பிரச்சினையினை மிகமோசமான முறையில் இவர்கள் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். இவ்வாறான உண்மைகளை மூடிமறைக்கும் பொலிஸ் அறிக்கைகளானது இச்சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கத்தின் அதிகாரங்களும் ஆசீர்வாதமும் இருப்பதனை நிரூபிப்பதாக அமைந்திருக்கின்றன.

குறித்த இத்தாக்குதல் சம்பவத்தில் 10 – 20 பேர் வரையான காடையர் கும்பல் ஒன்றே ஈடுபட்டிருந்த போதிலும் ஆரம்பத்தில் அங்கு விரைந்த பொலிசார் அவர்களைத் தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் படிப்படியாக தாக்குதலை மேற்கொண்டோரின் தொகை 200- 300 பேர் வரை அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. சுமார் பல மணிநேரமளவில் இம்மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அங்கிருந்த சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு பொருட்கள் வீதியில் இழுத்து வீசப்பட்ட பொழுதும் பொலிசார் இதனை தங்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என மிகச்சாதாரணமாக பொறுப்பற்ற வகையில் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே பௌத்த பிக்குகள் கற்களை வீசி எறியும் காணொளிகளையும் இணையத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. எவ்வளவு தூரம் சாவகாசமாக அந்த பிக்கு பெஷன் பிக்கு நிறுவனத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்துகின்றார் என்பதை பார்க்கும் போது இத்தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் எவ்விதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்நிலையில் கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவி வந்த பயங்கரவாதத்தினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம்இ இச்சிறிய சம்பவத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை எனக்கூறியிருப்பதானது வேடிக்கையான விடயம் மாத்திரமன்றி அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாகும். தலை நகருக்கு மிக அருகில் இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் காடைத்தனமான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருக்கும்பொழுது இதனைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் பொலிஸார் பல மணிநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் என்பதானது இச்சம்பவத்திற்கு பொலிசாரின் பூரண ஆசிர்வாதம் இருந்துள்ளது அல்லது பொலிசாருக்கு மேலிடத்திலிருந்து இவ்வாறான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்கின்றது.

சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்கள் தங்கள் முஸ்லிம் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொது பல சேனா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் குறித்த சம்பவத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற சில ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே இச்சம்வமானது முஸ்லிம்கள் மீதான விசமத்தனமான, திட்டமிடப்பட்ட இனவாத நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிகப்பயங்கரமாக வலுவடைந்து வருவதையே உறுதிப்படுத்துகின்றது. எனினும் இவ்வாறான வெளிப்படையான பயங்கரவாத இனவாத நடவடிக்கைகளை தடுத்து நாட்டில் மீண்டும் அசாதாரண சூழல் உருவாகுவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் சமூகம் கடந்த ஒருவருட காலமாக குறிப்பாக தம்புள்ளை பள்ளிவாயில் தாக்கப்பட்ட சம்பவ தினத்திலிருந்து இவ்வாறான விசமிகள் மீது பாரபட்ச மற்ற சட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு அரசைக் கோரிவருகின்றனர்.

ஆனால், மிக வெளிப்படையான முறையில் இது வரை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இது போன்ற எந்தவொரு இனவாத வன்முறைத் தாக்குதலின் போதும் சூத்திரதாரிகள் மீது எவ்வித சட்ட நடவடிக்கைகளையோ அல்லது அவர்களில் ஒருவரேனும் கைது செய்யப்படுவதையோ அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.

இந்நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் உடமைகளையும் பாதுகாக்கவேண்டிய தலையாய பொறுப்பு அரசிற்கே இருக்கிறது. இருப்பினும் கடந்த ஒரு வருடமாக முஸ்லிம் மக்களின் மத கலாசார உரிமைகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் குறிவைத்து நடாத்தப்பட்டு வரும் இனவாத முஸ்லிம் வெறுப்புணர்வு பிரச்சாரங்களைக் கட்டுப் படுத்துவதற்கு இதுவரையில் எதுவுமே செய்ய முடியாத அரசாங்கம் அந்த இனவாத பிரச்சாரங்களின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட பெஷன் பக் மீதான தாக்குதலை கட்டுப்படுத்த தவறியிருக்கிறது.

இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டோர் பற்றிய தெளிவான அடையாளங்கள் அனைத்தும் வீடியோ மற்றும் போட்டோக்களாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் தாக்குதலில் நேரடியாக சம்பந்தப்பட்டோரை சம்பவ இடத்திலேயே கைது செய்யவில்லை என்பது முஸ்லிம்களை மேலும் இந்நாட்டின் அமைதியை விரும்பும் அத்தனை மக்களையும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.

எனவே, இத்தாக்குதல் சம்பவத்திற்கான முழுப்பொறுப்பினையும் அரசு ஏற்றுக் கொள்வதோடு இந்த நிலைமைகளை கட்டுப்படுத்தி சம்பந்தப்பட்டோரை கைது செய்து சட்டத்தினையும் ஒழுங்கையும் நிலைநிறுத்தி இந்நாட்டின் நிரந்தர அமைதியையும் இயல்பு நிலைமையினையும் உறுதிப்படுத்த வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறது. 

நன்றி.

PMGG ஊடகப்பிரிவு,
காத்தான்குடி.

Published by

Leave a comment