நாட்டில் தற்போது நிலவுகிற சூழல் இனியும் தொடர முடியாது – இந்த நாட்டில் உண்மையான சமாதானம் இல்லை – ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: ஒரு அரசியல்வாதி என்கிற முறையில், தீர்வு என்பது அரசியல் வழிமுறைகள் மூலம் வரவேண்டும் என்பதுதான் எனது கருத்து. வேறு எந்த வகையிலும் அல்ல. நாட்டில் தற்போது நிலவுகிற சூழல் இனியும் தொடர முடியாது என்பதை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் வெளியில் உள்ளவர்களும் உணர்ந்துள்ளோம். இந்த நாட்டில் உண்மையான சமாதானம் இல்லை. விடுதலைப் புலிகளை தோல்வியுறச் செய்வது என்பது கிளர்ச்சியை நடத்தி வந்த ஒரு ஆயுதக் குழுவை ஒடுக்குவது மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த அவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையயற்றுகையில்,
சமாதானம் என்பது அனைத்து சமூகத்தினரையும் ஒன்றினைத்து பெறப்பட வேண்டிய ஒன்று. அதைத்தான் ஜனாதிபதி ராஜபக்ஷ விடுதலைப் புலிகளை தோல்வியடைச் செய்த பிறகு நாடாளுமன்றத்தில் சொன்னார். 2009 ஆம் ஆண்டு ஐநா விலும் அதையேத்தான் அரசு சொன்னது. ஆனால் அது நடைமுறைப்படுத்தபடுவது இல்லை. அனைத்து சமூகங்களையும் ஒன்றாக இணைப்பதற்கு பதிலாக அரசு மத ரீதியிலான பிரிவினையை முன்னெடுக்கிறது. அனைரையும் பிரித்து அதன் மூலம் பலனடையலாம் என்று அரசு நம்புகிறது.

பொதுப் பிரச்சினைகளை எடுப்போம். நாட்டில் ஊழல் உள்ளது. நாட்டில் ஜனநாயகம் இல்லை. சட்டத்தின் ஆட்சி இங்கு இல்லை. நீதித்துறையில் சுதந்திரம் இல்லை. ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. நாட்டில் மனித உரிமைகள் மற்றும் சமாதான் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இன்ங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் குறித்தும் கவனிக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் நடந்துள்ளதா?

போருக்கு பிறகு நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதா? 2009 ஆம் ஆண்டு ஐ நா மனித உரிமைக் குழுவுக்கு முன்னால் அரசு சில நல்ல பிரேரணகளை முன்வைத்தது. இதையடுத்து நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் வந்தது. அந்த ஆணைக் குழுவின் அறிக்கை குறித்து நாங்கள் முழுமையாக திருப்தியடையவில்லை என்றாலும், அது ஒரு துவக்கம் என்று கருதினோம். அவ்வகையில் ஐ. தே. க, த. தே. கூ மற்றும் இதர சிலர் கருத்துக்களை வெளியிட்டோம். ஆனால் அதற்கு பிறகு ஒன்றுமே நடக்கவில்லை. ஆணக்குழுவின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நான் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தேன்.அங்கே முன்னேற்றத்துக்கு மாறாக நிலைமைகள் மோசமாகிக் கொண்டு வருகின்றன. தமிழ் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அது சர்வதேச அளவில் ஒரு பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. இந்தியா உட்பட பல இடங்களில் அது எதிரொலித்துள்ளது. இந்த விஷயம் இந்தியாவை ஆளும் அரசின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது.

இங்கே முஸ்லிம்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். இன்று அவர்கள் ஒரு மூலையில் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுகின்றன. இது குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளோம். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எமது கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் பொதுபல சேனா அமைப்புடன் பேசினார்கள். அதன் மூலம் பதற்றமான சூழலை ஓரளவுக்கு குறைக்க முடிந்தது. ஆனால் அரசு அதை சீர்குலைத்தது. சிங்கள அமைப்புகளுக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்திய அரசு ஒருவர் மீது மற்றொருவரை ஏவிவிட்டது. நேற்று முன்தினம் என்ன நடந்தது. அந்த நடவடிக்கையை கண்டித்து 24 மணி நேரத்துக்குள் ஒரு அறிக்கை விடுமாறு நாங்கள் அரசை கோரியிருந்தோம். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. இப்படியான சூழலில் எவ்வாறு நாம் முன்னேறிச் செல்ல முடியும்?

இந்திய அரசு கூட்டமைப்புக்கும் இதர தமிழ் அமைப்புகளுக்கும், 13 ஆவது அரசியல் சட்ட திருத்த்தை முழுமையாக அமல் படுத்தவும் அதற்கு மேலே செல்லவும் அரசு தங்களிடம் உறுதி அளித்துள்ளது என்று கூறியது. அவர்களது கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படும் எனவும் கூறியது, ஆனால் இன்று வரை அது நடைபெறவில்லை. இலங்கை அரசு தமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நறைவேற்றச் செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசு தோல்வியடைந்துள்ளது. எனவே இனி அந்தப் பாதையில் பயணிக்க முடியும் என்று நான் கருதவில்லை.

இந்தியாவில் இருக்கக் கூடிய அரசியல் சூழல் அவர்கள் தேர்தலுக்கு தயாராவதில்தான் கவனம் செலுத்துவார்கள். அப்படியான நிலையில் நாம் நமது கோரிக்கைகளை எவ்வகையில் வென்றெடுக்க முடியும்? இதற்கு ஒரே வழி அனைத்து சமூகங்களுகும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதுதான். ஏனென்றால் பெரும்பாலான சமூகத்தின் மீது சில கோரிக்கைகளை திணித்து அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், ஒன்றும் செய்ய முடியாது. அதே நேரம் பெருமான்மை சமூகத்திலுள்ள பெருமளவினர் ஏதோ ஒரு வகையான அரசியல் தீர்வுக்கு உடன்பட சித்தமாக உள்ளனர். எனவே மூவின மக்களையும் ஒன்றாக கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிங்கள மக்களும் கூட இந்த அரசை விரும்பவில்லை.

இப்போதையத் தேவை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேறிச் செல்வதுதான் ஒரே வழி. அவ்வகையான ஒரு பொதுப் போராட்ட நடவடிக்கையில், எந்த எந்த விதத்திலெல்லாம் நாம் ஒன்றாக இணைய முடியும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் மட்டுமல்ல அனைத்து விஷயங்களிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைமையில் இயங்கும் பல மாகாண சபைகள் கூட அதிகாரப் பரவலாக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment