– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும், முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம். ஸமீல் நழீமிக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்ஸஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் ஜவாத், மற்றும் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி), உப செயலாளர் ஏ.எம். சாதிகீன், சம்மேளன பிரதிநிதிகள், உறுப்பினர்கள் உட்பட அதன் முக்கியஸ்த்தர்கள் உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஸமீல் நழீமி
“காத்தான்குடியில் பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றணைத்து இப்படியான ஓர் சம்மேளனம் அமையப்பெற்றிருப்பதனால் இந்த ஊரின் பிரச்சினைகள் எமக்கு வருவது கிடையாது. இப்படியான சம்மேளனங்கள் சகல ஊர்களிலும் உருவாக்கப்பட வேண்டும்.

ஏனெனில் ஏராளமான பிரச்சினைகள் பள்ளிவாசல்கள் தொடர்பான பிரச்சினைகளாகும்.
அன்றாடம் தமது திணைக்களத்திற்கு பள்ளிவாசல்கள் தொடர்பான பிரச்சினைகள் கிடைக்கின்றன.
ஆனால் இந்த காத்தான்குடியிலிருந்து இவ்வாறான பள்ளிவாசல்களின் பிரச்சினைகள் தமது திணைக்களத்திற்கு வருவதில்லை. அதற்கு காரணம் இந்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இங்கு திறன்பட இயங்குவதனாலேயே ஆகும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment