
பஹ்மி யூஸூப்
திருகோணமலை நிலாவெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் எம்.பீ.எம்.சமீம் தலைமையில் பாடசாலை மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். டீ. ஏ. நிஸாம் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இருந்த போதும் முதலமைச்சரின் அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததனால் இறுதி நேரத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.
கௌரவ விருந்தினராக திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் என்.விஜேந்திரன், சிறப்பு விருந்தினர்களாக உதவிக் கல்விப் பணிப்பாளர் என். யாக்கூப் ஜான் (உடற்கல்வி), குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் ஜே. எம். ஜெனா ஆகியோரும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர், பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர், பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், நிலாவெளி ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மற்றும் பேஷ் இமாம் ஆகியோர் ஏனைய அதிதிகளாக கலந்து கொண்டனர்.
ஸபா, மினா, ஹிரா இல்ல மாணவர்களின் விளையாட்டு போட்டிகள், உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்ச்சி மற்றும் பழைய மாணவர்களின் நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றதுடன் ஹிரா இல்லம் கூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டது. வெற்றிபெற்ற இல்லங்கள், மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கப்பட்டது.
அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a comment