‘சிறுவர்களை கண்காட்சிக்கு அழைத்து வருவதானால் அவர்களின் சட்டைப்பையில் தொலைபேசி இலக்கமோ வீட்டு முகவரியையோ எழுதிய காகிதமொன்றை வைக்கவும்’: பொலிஸார்
அம்பாறையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் 2013 தேசிய கண்காட்சி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை உட்பட கிழக்கு மாகாணமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சிக்காக அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களில் மும்மொழிகளிலும் பதாகைகளும் சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டு ள்ளன.
முதல் நாளான இன்று ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள் அடங்கலாக முக்கிய பிரமுகர்கள் கண்காட்சியைப் பார்வையிட உள்ளதோடு நாளை (24) முதல் 29ஆம் திகதி வரை பொதுமக்கள் பார்வைக்காக தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வளாகம் திறந்திருக்கும்.
30 வருட கால யுத்தத்தினால் சேதமடைந்த கிழக்கு பிரதேசத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் 2013 தேசத்துக்கு மகுடம் கண்காட்சி இம்முறை அம்பாறையில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, நீர்ப்பாசன திட்டங்கள் அடங்கலாக 30 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதனோடு இணைந்ததாக அண்டிய மாவட்டங்களும் முன்னேற்றப்பட்டு வருகின்றன. தேசத்துக்கு மகுடம் கண்காட்சியையொட்டி மொத்தமாக 60 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரியய அபிவிருத்திகள், கண்காட்சி ஏற்பாடுகள் என்பன செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் அம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 682 கிலோ மீற்றர் வீதிகள் 12634 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் 214 கிலோ மீற்றர் வீதிகள் 4383 மில்லியன் ரூபா செலவிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 257 கிலோ மீற்றர் வீதிகள் 4475 மில்லியன் ரூபா செலவிலும் திருகோணமலை மாவட்டத்தில் 211 கிலோ மீற்றர் வீதிகள் 3776 மில்லியன் ரூபா செலவிலும் அபிவிருத்தி செய்யத்திட்டமிடப்பட்டுள்ளன.
இதில் அம்பாறை மாவட்டத்தில் 126 கிலோ மீற்றர் வீதிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 140 கிலோ மீற்றர் வீதிகளும் திருகோணமலை மாவட்டத்தில் 87 கிலோ மீற்றர் வீதிகளுமாக மொத்தம் 363 கிலோ மீற்றர் வீதிகள் தெயட்ட கிருள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெவ்வை கூறினார்.
கண்காட்சியை பார்வையிட வரும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை தேசத்திற்கு மகுடம் – 2013 கண்கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை நகருக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்புக்கு 5 ஆயிரம் பொலிஸாரும், 1500 விஷேட அதிரடிப் படையினரும் விஷேட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தரவுள்ளதால், ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக இக்காலப்பகுதியில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள உணவு உற்பத்தி செய்யப்படும் நிலையங்கள், உணவு பரிமாறும் நிலையங்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள், தேநீர்ச்சாலைகள், குளிர்பான நிறுவனங்கள், மற்றும் ஐஸ்கிaம் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றிலிருந்து விற்பனை செய்யப்படும் உணவுகளின் பாதுகாப்பை கடுமையான அறிவுறுத்தல் வழங்குவதன் மூலமும், அடிக்கடி திடீர் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமும் உறுதிப்படுத்துமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம். எஸ். இப்ராலெப்பை கேட்டுள்ளார்.
கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விஷேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு இலவசமாக கண்காட்சியை பார்வையிட அனுமதி வழங்கப்பட உள்ளதோடு தேசத்துக்கு மகுடம் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ள இலங்கை லொத்தர் சபையின் 20 ரூபா லொத்தர் சீட்டை பயன்படுத்தியும் கண்காட்சியைப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைத் திறந்து வைக்கச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு மாகாணத்தில் மேலும்பல அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்க உள்ளார்.
பொத்துவில் முகுது மகாதேவி விகாரை அரந்தலாவ பெளத்த பிக்கு நினைவுத்துபி, திருக்கோவில் சக்தி வித்தியாலயம், சம்மாந்துறை அல்- அஸ்ஹர் வித்தியாலயம் என்பவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கணனி பயிற்சி நிலையங்கள், என்பவற்றை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்க உள்ளார்.
மேலும் ஒலுவில் துறைமுகத்தையும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்க உள்ளார். அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் 120 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் பெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட் சியில் சுமார் 200இற்கும் அதிகமான காட்சிகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியை முன்னிட்டு இம்முறை 60,000 மில்லியன் ரூபா செலவில் நான்கு மாவட்டங்களில் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.
பொதுமக்களுக்கு ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் 115 அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
இதேவேளை கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களுக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
கண்காட்சிக்கு வரும் போது வீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வீதி ஒழுங்குகளை பின்பற்றி வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் பிரிவில் வைத்து வாகனம் விபத்துக்குள்ளானால் 063-2222321 எனும் இலக்கத்திற்கோ அம்பாறை வலய போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டாரவின் 072 8366656 எனும் இலக்கத்திற்கோ அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயலத்தின் 077 2651728 இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
சிறுவர்களை கண்காட்சிக்கு அழைத்து வருவதானால் அவர்களின் சட்டைப்பையில் தொலைபேசி இலக்கமோ வீட்டு முகவரியையோ எழுதிய காகிதமொன்றை வைக்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
யாராவது தவறவிடப்பட்டால் அருகிலுள்ள பொலிஸ் தகவல் பிரிவிற்கு சென்று உரிய ஆலோசனை பெறுமாறும் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை இம்முறை கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய நான்கு மாவட்டங்களில் 60 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன்
Leave a comment