
– பழுளுல்லாஹ் பர்ஹான்
எல்லாவற்றையும் மறந்து அபிவிருத்திப் பாதையில் நாமனைவரும் இன மத பேதமின்றி கைகோர்த்து ஒற்றுமையாக நடைபோட வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தை திறந்து வைத்து விட்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை நாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் பல பின்னடைவுகளை சந்தித்த ஒரு மாவட்டமாகும்.கடந்த30வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டது மாத்திரமல்லாமல் 2004ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தினாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம்.


2004ம் ஆண்டு இந்நாட்டில் நான் பிரதமராக இருந்த காலம்.அப்போது நான் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டத்தை நேரில் வந்து பார்வையிட்டேன்.அப்போது கடுமையான பின்னடைவுகளை கொண்டிருந்த இந்த மாவட்டம் இப்போது பல்வேரு அபிவிருத்திப் பணிகளை கண்டு வருகின்றது.
ஆகவே இப்படியான சூழ்நிலையில் நாமெல்லோரும் இன மத பாகுபாடின்றி எமது மாவட்டத்தை மேலும் பல அபிவிருத்தியின் பால் இட்டுச் செல்வதற்கு ஒற்றுமைப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மிக குறுகிய காலத்தில் இந்தப்பாலத்தின் நிர்மாண வேலைகளை முடித்த ஊழியர்களுக்கும் இதற்கு எமக்கு நட்புறவுப்பாலமாக இருந்து உதவி வழங்கிய ஜப்பான் நாட்டிற்கும் இத்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர நிர்மல கொதலாவ, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ, ஜப்பான் ஜெய்க்கா திட்டத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் ஹறுமி அவோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத், உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஸீர் சேகுதாவூத், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், திணைக்கள அதிகாரிகள, மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a comment