
– பஹ்மி யூஸூப்
திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எம்.எம்.எம். முஹைஸ் தலைமையில் பாடசாலை மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பெருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே பிரதம விருந்தினராக கலந்து கொள்ள இருந்த போதும், பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் திரு ரத்னாயக்க கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினராக திருகோணமலை வலயக் கல்வி பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர் என். யாக்கூப்ஜான் (உடற்கல்வி) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை தலைமையக பொலிஸ் அதிகாரி எம்.எஸ்.எம். நிஹார் (ஐ.பீ), பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் என். நூர் முகமட், பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் என்.எம்.மஹ்ஸூம், ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஜே. மஃரூப் (ஜே.பீ) ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இம்முறை வழமைக்கு மாற்றமாக இவ்வருடம் மாத்திரம் தற்போதைய அதிபருக்கு முன்னிருந்த அதிபர்கள் மூவரின் பெயர்கள் ‘ வாழும் போது வாழ்த்தப்பட வேண்டும் ‘ என்ற நோக்கில் காதர் (நீலம்), முஸ்தபா (மஞ்சள்), யூஸூப் (பச்சை) என இல்லங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இல்ல மாணவர்களின் விளையாட்டு போட்டிகள், உடற்பயிற்சி கண்காட்சி நிகழ்ச்சி மற்றும் பழைய மாணவர்களின் நிழகழ்ச்சிகள் என்பன நடைபெற்றதுடன், யூஸூப் (பச்சை) இல்லம் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டது.
வெற்றிபெற்ற இல்லங்கள் மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கப்பட்டது. அயல் பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் பழையமாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a comment