– இர்ஷாத் றஹ்மத்துல்லா

இலங்கை தேயிலைக்கு தெடர்ந்தும் ஈராக் சந்தையில் சிறந்த கிராக்கியினை ஏற்படுத்துவது தொடர்பில், ஏற்றுமதியாளர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று இடம் பெற்றது.
கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன, மேலதிக செயலாளர் சீதா செனவிரத்ன, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் தலைவரும், நிறைவேற்று பணிப்பாளருமான கலாநிதி யூசுப்.கே.மரைக்கார், மற்றும் வர்த்தக திணைக்கள பணிப்பாளர் உட்பட ஏற்றுமதியாளர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

இலங்கை தேயிலையின் தரம், ஏற்றுமதி என்பன குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் தேயிலைக்கே ஈராக் முன்னுரிமையளித்து அவற்றை இறக்குமதி செய்வதாகவும், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாக இங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

அதே வேளை ஈராக் உயர் வர்த்தக குழுப் பிரதி நிதிகள் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாகவும், அதே போல் இலங்கை வர்த்தக குழுவொன்றும் ஈராக் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.


Leave a comment