
இர்ஷாத் றஹ்மத்துல்லா
பயங்கரவாத செயற்பாடுகள் காணமாக பாதிப்புக்களை கண்ட பாடசாலைகளை புனரமைப்பு செய்கின்ற போது அதில் முஸ்லிம் மாணவர்கள் கற்கின்றார்கள் எனில் அதனை இனவாதமாக சித்தரிக்கும் அமைப்புக்கள் மன்னாரில் காணப்படுவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், முன்னால் அமைச்சர் மர்ஹூம் நுர்தீன் மசூர் அவர்கள் விட்டுச் சென்ற அபிவிருத்திகளை முன்னெடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் பிரபல பாடசாலையாக காணப்பட்ட எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரிக்கான இரு மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல்நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அங்கு அமைச்சர் பேசுகையில்,
எருக்கலம்பிட்டி கிராமம் என்பது மிகவும் பிரபலமான கிராமமாகும். வடமகாணத்தில் மகா வித்தியாயலம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்ட போது அதில் முதலாவது உள்வாங்கப்பட்ட பாடசாலையாகும். பங்கரவாதிகளினால் இம்மக்கள் வெளியேற்றம் செய்யப்பட்ட போது எல்லாம் முடக்கப்பட்டுவிட்டது. நாம் இழந்தவைகளை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகளை எடுக்கின்ற போது அவற்றை இனவாதமாக காட்டுகின்றனர்.
இந்திய வீடமைப்பு திட்டத்தை இங்கு கொண்டுவருகின்ற போது அதற்கெதிராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்துக்கு பிழையான தரவுகளை கொடுத்து இதனை இல்லாமல் ஆக்குவதற்கு முயற்கிக்கின்றனர். மன்னாரில் இருக்கின்ற பொது மக்களுக்கான அமைப்பு என்று கூறுபவர்கள் அவர்களது இனவாத சிந்தனையினை பிரதி நிதித்துவப்படுத்திவருகின்றனர். கடும் போக்குடன் முஸ்லிம்களுக்கு எதிராக் செயற்படுகின்றனர்.
இவ்வாறான துர்ப்பாக்கியமான நிலையில் இன்று எமது முன்னெடுப்ப்புக்கள் காணப்படுகின்றன. முன்னால் அமைச்சர் மர்ஹூம் மசூர் அவர்கள் பல தமிழ் கிராமங்களுக்கு உதவி செய்துள்ளார். அதே போன்று நாங்களும் இனவாதமற்ற முறையில் செயற்படுகின்றோம். இன்று எருக்கலம்பிட்டி மக்கள் அரசியல் தலைமைத்துவத்தை இழந்து தவிக்கின்றனர். இந்த இடை வெளியினை நிரப்ப வேண்டிய பொருப்பு எமக்கிருக்கின்றது. தேர்தல் காலங்களில் பிரிந்து நின்று அரசியல் செய்யலாம். அது ஜனநாயக உரிமை ஆனால், இது தேர்தல் காலம் அல்ல அபிவிருத்தியின் காலம். தங்களது தனிப்பட்டவிருப்பு வெறுப்புகளுக்காக வருகின்ற அபிவிருத்திகளை தடுப்போமேயானால் அது எதிர் கால எமது சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும். சில சகோதர்கள் மற்றும் பள்ளிவாசல் தலைமைத்துவங்கள், கற்றோர்கள் என்று பலர் இன்று ஒன்று சேர்ந்து எருக்கலம்பிட்டி மக்களது நலன் குறித்து எம்மோடு இணைந்து யினை செயற்படுகின்றனர்.
குறிப்பாக கலாநிதி ஹஸ்புல்லா அவர்கள் எருக்கலம்பிட்டியினை சேர்ந்தவர். இவர் இந்த எருக்கலம்பிட்டி மக்களுக்கு மட்டுமல்லாது வட மாகாண முஸ்லிம்களது சமூக, கலாசார, அபிவிருத்தி விடயங்கள் குறித்தும் மக்களின் பாதிப்புக்கள் குறித்து சமூக மயமாக்கல் செய்வதில் கடுமையாக பாடுபடும் ஒருவர் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் தமதுரையில்,
மன்னாரில் எருக்கலம்பிட்டி என்பது மறக்க முடியாதவொரு கிராம்மாகும்.முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சூசைதாஸன், றஹீம், மசூர் போன்றவர்கள் இங்கிருந்து தெரிவானவர்கள். மன்னார் மாவட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வந்த போது கற்பிட்டி கடற்கரையில் நின்று உங்களை வரவேற்றவன் நான். அப்போது முஸ்லிம், சமய விவகார அமைச்சராகவும் நான் இருந்தேன். நீங்கள் கடல் வழியாக வந்த போது பட்ட வலியும், வேதனைகளும் இன்றும் என் கண்முன் தோன்றுகின்றது. கையில் பச்சிளம் குழந்தைகளை ஏந்தி மன்னாரில் இருந்து புறப்பட்ட நீங்கள் கற்பிட்டியினை வந்தடைந்த போது பிள்ளையினை கடலில் தவறவிட்ட வரலாறும் உண்டு. இன்று இந்த மக்களுக்கு எதிராக பேசுபவர்கள் இவற்றையெல்லாம் மறந்துவிட்டனர். ஜெனீவாவுக்கு சென்று எதையோ சொல்கின்றனர். ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்ட்ட அநீதியினையும் பேச வேண்டும்.
இலங்கை பாராளுமன்றத்தில் எருக்கலம்பிட்டி முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நிச்சயமாக பேசுவேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கூறினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி, மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான், ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ். எல். டீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை. எல். எஸ். ஹமீட், இணைப்பாளர்களான ஜசார், பஹீல், மபாயஸ் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சமூகமளித்திருந்தனர்.
Leave a comment