
-MJ
பயங்கரவாதக் குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த அபூ கதாதா, மீண்டும் ஐக்கிய இராச்சிய விசேட எல்லை கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் UKBA -SIAC கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கடந்த வருடம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த அபூ கதாதா, பிணை நிபந்தனைகளை மீறியதன் காரணமாக கடந்த சனிக்கிழமை UKBA அமைப்பினால் கைது செய்யப்பட்டார்.
‘ஸ்கொட்லாண்டியார்ட்’ பொலிஸார் வியாழக்கிழமை கதாதாவின் வீட்டில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டிருந்தனர். இதன் பின்னர் லண்டன் ‘மீட்ரோபொலிட்டன்’ பொலிசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
1999ல் ஜோர்டான் நாட்டில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதற்காக அபூ கதாதா குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இதன் பின்னர் ஒசாமா பின்லாடன் தலைமையில் அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டார். ஒசாமாவின் வலது கை என இவரை அழைப்பதுண்டு.
இதன் பின்னர் பிரித்தானியாவில் குடியேறிய அபூகதாதா, பிரித்தாணிய குடியுரிமைக்காக விண்ணப்பித்து நீதிமன்றம் சென்றிருந்தார். அவரது வழக்குகள் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பல பிரபல்யமான ஆங்கில வக்கீல்களின் மூலம் விவாதிக்கப்பட்டு, வந்தபோதிலும், ஓர் பயங்கரவாதிக்கு பிரித்தானிய குடியுரிமையா? என்பதாக ஆங்கில பத்திரிகைகள் விமர்சித்தித்து வந்தன.
அபூ கதாதாவின் வழக்குகள் மனித உரிமைகளுக்கு கீழ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு வந்ததால், பயங்கரவாதி என நிரூபிக்கப்பட்டும், அவரை பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
அபூ கதாதா, பிணை நிபந்தனைகளை மீறியமை தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், இவரது மேல் முறையீடு பலனளிக்கப்போவதில்லை எனவும் இவரது குடியுரிமை மறுக்கப்பட்டு, நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் UKBA அறிவித்திருக்கின்றது.
இதற்கிடையில் அவர் சார்பாக எதிர்வரும் மார்ச் 21ம் திகதி மேல் விசாரணைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதுவரை அவரை பிரித்தானியாவில் தங்குவதற்கு UKBA செயலாளர் ‘தெரிசா மே’ அனுமதியளித்திருக்கின்றார். அது வரை அபூ கதாதா சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.
Leave a comment