
பழுளுல்லாஹ் பர்ஹான்
சர்வதேச மகளிர் தினம் 2013 இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது.
ஆரையம்பதி ஆற்றல் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சாதனை மகளிர்’என்ற தலைப்பிலான இளம் பெண் தலைமையினரை வலுவாக்கும் செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் ஆற்றல் பேரவையின் தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ல்ஸ், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி சத்தியானந்தி, வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை அதிபர் திருமதி கனகசிங்கம், மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா, மண்முனைப் பற்று பிரதேச சபை செயலாளர், கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி மற்றும் பெண் அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பெண்கள் உரிமைப் போராட்டம் தொடர்பில் ‘சாதனை படைத்த பெண்களின் பயணப்பாதை, பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்’ உள்ளிட்ட பல்வேறு உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு ஆற்றல் பேரவையினால் ‘பெண்களின் விழிப்பே சமூகத்தின் எழுச்சி’ எனும் சஞ்சிகையும் வெளிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment