-அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு-
நாட்டின் சட்டத்தை கையிலெடுத்து உத்தியோகபூர்வமற்ற பொலிஸார் போல் பொது பல சேனா உறுப்பினர்கள் செயற்பட ஆரம்பித்தால் அரசின் உத்தியோக பொலிஸார் அவர்களை உரியமுறையில் கவனித்துக்கொள்வார்கள் என அமைச்சரைவப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலளார் சந்திப்பு தகவல் ஊடக அமைச்சில் இன்று (07) பிற்பகல் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பி கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது பற்றி அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
இலங்கையின் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னேற்றமடைய ஹலால் சான்றிதழ் அவசியம் என்பது இப்பொது உணரப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் இல்லாமல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது நாட்டின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த முடியாது.
எனினும் உள்ளுர் சந்தை வாய்ப்புக்களுக்கு இதுவல்லாத வேறு வழிமுறையொன்றைக் கையாள இரு தரப்பினரும் ஒரு இணக்கத்துக்கு வந்தால் அதனை அரசு வரவேற்கும். ஒரு நடவடிக்கை முடிவுக்கு வந்தால் எதிர் நடவடிக்கையும் ஒழிந்துபோகும்.
எக்காரணம் கொண்டும் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசு பொறுப்பேற்காது. அதேவேளை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் சீரழிக்க எவருக்கும் அரசு இடமளிக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment