தொகுப்பு: பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட அரசியல் வாதியும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஆலோசகரும் காத்தான்குடி பட்டின ஆட்சி மன்ற சபைத் தலைவருமான மர்ஹூம் அல்-ஹாஜ் ஏ.அஹமது லெப்பை அவர்களது 25வது ஆண்டு பூர்த்தி எதிர்வரும் 06.03.2013 புதன்கிழமை நினைவு கூரப்படுகின்றது.
மனிதனாகப் பிறந்தால் மட்டும் போதாது மனிதப் புனிதனாக வாழ்ந்து மறைதல் அவசியம். உலகின் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்தவர்களை உலகம் ஒரு போதும் மறப்பதில்லை. இவ்வாறு வாழ்ந்து காட்டியவர் மர்ஹூம் அல்-ஹாஜ் ஏ. அஹமது லெப்பை அவர்கள்.


14.10.1935 ம் ஆண்டு இப்பூமிக்கு காலடியெடுத்து வைத்த இவர், தனது கல்வியை ஆங்கில மொழி மூலம் கற்றார். தனது தந்தை மரணித்தற்குப் பின்னர் தந்தையார் நடாத்தி வந்த வர்த்தக ஸ்தாபனத்தை தொடர்ந்துது நடத்தலானார். வர்த்தகத்துடன் இணைந்து பொதுப் பணிகள், சமூக சேவைகள் என்பவற்றிலும் ஈடுபட்டார். பொதுப் பணியின் ஆரம்பக் கட்டமாக இலங்கை முஸ்லிம் வர்த்தக சங்கத்தினை நிறுவி அதன் செயலாளராக பதவி வகித்தார்.

இப்பணியில் கிடைத்த அனுபவத்தின் மூலம் மக்களிடத்தில் கிடைத்த நன்மதிப்பின் மூலமும் 1956ம் ஆண்டு நகராட்சி மன்றத்திற்கு போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியல் உலகில் பிரவேசித்தார்.
1974ம் ஆண்டு முதல் 19977ம் ஆண்டு வரை காத்தான்குடி நகராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்தார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்த இவர், புனித மார்க்கத்திற்கான பணிகளை அயராது மேற்கொண்டதுடன் ஒரு மொழி பேசும் இரு சமயங்களைப் பின்பற்றும் இரு சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட சமூகப் பிணக்குகளுக்கும் கலவரங்களுக்கும் சிறப்பான தீர்வு காண்பதில் தீர்க்கதரிசனம் படைத்த ஒரு தலைவராக இவர் திகழ்ந்ததுடன் இக்கட்டான நேரங்களிலெல்லாம் சமாதானத்திற்காக உழைத்ததினால் இவருடைய மறைவு தமிழ்ப் பேசும் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கான மார்க்கக் கல்வி பயிலும் கல்லூரி ஒன்று இல்லாத குறையை காத்தான்குடியில் சித்தீக்கிய்யா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியை நிறுவியதன் மூலம் நிவர்த்தி செய்தார்.
இவர் இம்மண்ணின் மக்களுக்காக பரந்த பொதுத் தொண்டுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் எண்ணிலங்காடது.
தமது உயிரை துச்சமென மதித்த மர்ஹூம் அஷ்ஷஹீட் அல்-ஹாஜ் ஏ.அஹமது லெப்பை அவர்கள் ஊருக்காக சேவை செய்வதையே கண்ணாக கொண்டிருந்தார்.

காத்தான்குடியின் கண்களாக திகழ்கின்ற ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி கூட ஒரு கட்டடத்தில் இயங்கி வந்ததை பல மாடிக் கட்டடங்களாக விஸ்தரித்ததுடன் அல்-குர்ஆன் மனனப்பிரிவு (ஹிப்ழ்) ஒன்றையும் ஆரம்பித்து தனது நிர்வாகத்தின் கீழ் அதை வளர்ச்சியடையச் செய்ததனால் பல ஹாபிழ்கள் உருவாக்கி வெளியாக்கிய பெருமை அவரையே சாறும்.
காத்தான்குடிக்கும் அதனை சுற்றியுள்ள முஸ்லிம் பகுதிகளுக்கும் மிக்பபெரிய குறையாக இருந்த வைத்தியசாலை இல்லாக் குறையை மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் பல தனவந்தர்களின் உதவியைப் பெற்று அன்றைய கௌரவ அமைச்சர் மர்ஹும் ஏ.சி.எஸ். ஹமீதின் உதவியோடு வைத்தியசாலையை நிறுவுவதற்கு வழிவகுத்தார்.
இத்தனைக்கும் மேலாக சிதறி வாழ்ந்து கொண்டிருந்த கிழக்கிழங்கை அனைத்து முஸ்லிம்களையும் ஒன்று சேர்த்து அவர்களிடத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி பலம் பொருந்திய சக்தியாக மாற்றும் நோக்குடன் திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு முதலிய மூன்று மாவட்டங்களையும் ஒன்றிணைத்தான ‘கிழக்கிலங்கை முஸ்லிம் சம்மேளனம்’ என்ற ஒன்றை உறுவாக்கி அதன் செயலாளராக செயற்பட்டார்.

இவரின் இறுதிக் கால சிந்தனைகள் தனியே காத்தான்குடியை மாத்திரம் கொண்டல்லாது தேசிய சிந்தனைகளை நேர்கொண்டதாக திகழ்ந்தது.
முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் சொல்லுவதைப் போல ‘இவர் காத்தான்குடிக்கோ அல்லது கிழக்க்ழங்கைக்கோ உரித்தானவராக மாத்திரம் இல்லாது இலங்கை முஸ்லிம்களின் ஒரு பொதுவான சொத்தாகவே மிளிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment