வீஸா இன்றி இலங்கைக்கு வந்து எமது நாடு குறித்து விசாரணை நடத்த எந்த நாட்டிற்கும் முடியாது. நாட்டின் இறைமைக்கு மாற்றமாக அவ்வாறு வர இடமளிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.
அரசாங்கத்திடம் சரணடைந்த 75 புலி உறுப்பினர்களை படையினர் பாலியல் சித்திரவதை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) தெரிவித்துள்ள குற்றஞ்சாட்டினை முற்றாக மறுத்த அவர் இது இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு சோடிக்கப்பட்ட பொய் அறிக்கை எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் மனித உரிமை பேரவை அமர்வு குறித்தும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) குற்றச்சாட்டுகள் குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், சரணடைந்த புலி உறுப்பினர்களை பாலியல் ரீதியில் சித்திரவதை செய்ததாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் இட்டுக்காட்டப்பட்டது. 26 ஆம் திகதி இது தொடர்பான அறிக்கை வெளியிடப் படுமென கூறப்பட்டாலும் மறுநாளே அது வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை எனக்கு 22 ஆம் திகதியே கிடைத்துவிட்டது. அதற்கு முன்னரே இது தயாரிக்கப்பட்டி ருக்கும். இது தொடர்பான ஆதாரங்கள், சாட்சிகள் மற்றும் உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை நாம் அந்த அமைப்பிடம் கோரினோம். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக வழங்க முடியாது என மறுக்கப்பட்டது.
இவர்கள் தூதரகங்களினூடாக வீஸா பெற்றே வெளிநாடு சென்றிருப்பர். அங்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னரே மனித உரிமை கண்காணிப்பகம் அமைப்பிற்கு அறிவித்திருப்பர். இது தொடர்பான ஆதாரங்கள் எங்கே? அரசாங்கத்தை அபகீர்த்திக்குட்படுத்த திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையே இது. இது அறுவறுப்பான செயலாகும்.
இது தவிர இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைந்த ஒரு இலட்சத்து 47 ஆயிரம் பொதுமக்களை நிர்வாணமாக சென்றதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவை பொய்க்குற்றச்சாட்டுகளாகும். இவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளோம். நவநீதம் பிள்ளை இலங்கை குறித்து குறைத்து மதிப்பிட்டு பொய்களை அடுக்கி வருகிறார். இதனை மனித உரிமை பேரவை (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க வெளிப்படையாக விமர்சித்தி ருந்தார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பும் வெளியிட்டார். ஜுலை கலவரத்தின் பின் வெளிநாடுகளுக்குச் சென்ற புலம் பெயர் தமிழ் மக்கள் உலக தமிழ் போரத்துடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றனர்.
மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முகம்கொடுக்க கடைசி நேரம் வரை காத்திருக்காது உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை இறுதி நேரத்திலே இந்தியா தனது நிலைப்பாட்டை வெளியிட்டது. இம்முறையும் இறுதி நேரத்தில் இந்தியா தனது முடிவை வெளியிடும்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில விஸா இன்றி இலங்கை சென்று இலங்கை குறித்து விசாரணை நடத்த மீண்டும் மனித உரிமைப் பேரவையில் (ஹியுமன் ரைட்ஸ் வொட்ச்) கூறியுள்ளன. அவ்வாறு வீஸா இன்றி இலங்கை வர எந்த நாட்டுக்கும் முடியாது. அவ்வாறு செய்வது ஒரு நாட்டை ஆக்கிரமிப்பது போன்றதாகும். இதற்கு இடமளிக்க முடியாது. மனித உரிமைப் பேரவையினால் அவ்வாறு வீஸா இன்றி இங்கு வர முடியாது. பாதுகாப்பு சபையினூடாக அவ்வாறு வர அவகாசம் உள்ள போதும் அதிலுள்ள வீட்ரோ அதிகாரமுள்ள நாடுகள் எமக்கு ஆதரவாகவே உள்ளன.
– தினகரன்
Leave a comment