பழுளுல்லாஹ் பர்ஹான்

‘தேசத்திற்கு மகுடம்’ அபிவிருத்தி கண்காட்சிக்கு சமாந்தரமாக பொலநறுவையில் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள கட்டடங்களின் நிர்மாண வேலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பற்றி ஆராய்வதற்காக நீதியமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் அங்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
பொலநறுவை நீதிமன்றத்திற்கு வருகை தந்த அமைச்சர் அங்குள்ள வசதிகளைப் பற்றி நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தினார்.

அப் பேச்சுவார்த்தையின் போது பொலநறுவை உயர் நீதிமன்ற நீதிபதிக்கான வாசஸ்தலத்தை நிர்மாணித்தல், சட்டத்தரணிகளுக்காக புதிய அலுவலகமொன்றை அமைத்தல், ஹிங்குரங்கொட பகமுன மற்றும் மன்னம்பிடிய புதிய நீதிமன்ற கட்டடங்களை திறந்து வைத்தல் போன்ற விடயங்களிலும் அமைச்சர் ஹக்கீம் கவனம் செலுத்தினார்.
பொலநறுவை நீதிமன்ற கட்டடம் அமைந்துள்ள வளவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் அங்கு காணப்பட்ட வழக்குகள் சம்பந்தமான பொருட்களையும் கண்காணித்து, அவை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சிக்கு சமாந்தரமாக திறக்கப்படவுள்ள ஹிங்குரக்கொட புதிய மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னம்பிடிய சுற்றுலா நீதவான் நீதிமன்ற கட்டடங்களின் நிர்மாண பணிகள் பற்றியும் தமது விஜயத்தின் போது அமைச்சர் ஆராய்ந்தார்.
புதிய நீதிமன்ற கட்டடங்களைப் பிரதம நீதியரசரின் தலைமையில் திறந்து வைப்பதற்கான ஏற்பாடு மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஹிங்குரக்கொட புதிய நீதிமன்ற கட்டடத்தை நிர்மாணிப்பதுடன், சட்டத்தரணிகளின் அலுவலக வசதிகளுக்காக தனியான கட்டடமொன்றையும் நிர்மாணிப்பதற்கான காணியைப் பெற்றுக்கொள்தல் உள்ளடங்களாக, பொது மக்களின் தேவைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இவ் விஜயத்தில் நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் குமார் ஏகரத்தின, சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.டி.கே.டி. அரந்தர, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம். சல்மான் மற்றும் சட்டத்தரணிகள் சிலரும் பங்குபற்றினர்.
Leave a comment