
பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மாவட்ட சமாதானத்துக்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் தலைவராக காத்தான்குடியைச் சேர்ந்த அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சார்ல்ஸ் மண்டபத்தில் திருமலை–மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற பேரவையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்திலேயே இவர் பேரவையின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம் ஒருவர் பல்சமயப் பேரவைக்கு தலைவராக தெரிவு செய்யப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதையடுத்தே இந்நியமனம் வழங்கிவைக்கப்பட்டது.
பேரவையின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மௌலவி அப்துல் காதர் (பலாஹி) காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், இந்நாள் பொருளாளரும்,காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் ஆவார்.
காத்தான்குடி மெத்தைப்பெரிய ஜூம்மா பள்ளிவாயலின் நம்பிக்கைப் பொறுப்பாளராகவும்,மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவராகவும் கடமையாற்றி வருவதுடன் இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment