26,944 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பு

sb2011/ 2012 கல்வியாண்டின் பிரகாரம் மேலதிகமாக 5182 மாணவர்கள் உட்பட 26,944 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.

மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப் படவுள்ள 5182 மாணவர்களுக்கென சகல பல்கலைக்கழகங்களிலும் வளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக் கமைய புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப் பட்டுள்ளன. இதேபோன்று உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மேலதிகமாக 5182 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

இவர்களை மேலதிகமாக இணைத் துக்கொள்ள தேவையான கட்டட மற்றும் சகல பெளதிக வளங்களும் சகல பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.இதற்குத் தேவையான நிதியை அரசு பெற்றுக்கொடுத்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் பெளதிக வளங்களை பெற்றுக்கொடுப்பதற்காக அரசு மேலதிகமாக 4000 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் 5 பல்கலைக்கழகங்களில் 7 புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மார்ச் மாதம் சகல பல்கலைக்கழக ங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறிப்பாக பழைய பாடத்திட்டத்தின் பிரகாரம் 13,474 பேரும், புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் 13,470 பேரும் பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

மருத்துவ பீடத்துக்காக புதிய பாடத்திட்டத்தின் படி 470 பேரும் பழைய பாடத்திட்டத்தின்படி 845 பேருமாக மொத்தம் 1315 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

சட்ட பீடத்துக்காக புதிய பாடத் திட்டத்தின்படி 319 பேரும் பழைய பாடத்திட்டத்தின்படி 126 பேருமாக 445 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கலைப்பீடத்துக்காக புதிய பாடத்திட்டத்துக்கமைய 3491 பேரும் பழைய பாடத்திட்டத்துக்கமைய 2454 பேருமாக 5945 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

முகாமைத்துவ பீடத்துக்காக புதிய பாடத்திட்டத்தின் படி 2713 பேரும், பழைய பாடத்திட்டத்தின்படி 1287 பேருமாக மொத்தம் 4000 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

பொறியியல் பீடங்களுக்காக புதிய பாடத்திட்டத்துக்கமைய 790 பேரும் பழைய பாடத்திட்டத்துக்கமைய 772 பேருமாக மொத்தம் 1394 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டின் போது அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுத் தலைவர் பேராசிரியர் சஷனிகா ஹிரிபுரேகம, ஆணைக் குழுவின் மேலதிக தலைவர் பிரியந்த ஹேமகுமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தினகரன்

Published by

Leave a comment