
பழுளுல்லாஹ் பர்ஹான்
அவுஸ்திரேலியா நாட்டின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவின் தலைவி சூனைட் மற்றும் அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கை தூதரக ஆலோசகர் கிறிஸ்டபர் வூட்ஸ் குழுவினர் கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதை சந்தித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
இலங்கையர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கான காரணங்களை கண்டறிவதுடன், இவ்வாறான சட்டவிரோத பிரவேசங்களை தடுப்பது சம்பந்தமாகவும் முதலமைச்சருடன் விரிவாக கலந்துரையாடுவதற்கே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் தம் நாட்டிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் அங்கு படுகின்ற கஷ்டங்கள் குறித்து ஆஸி. எல்லைப்பாதுகாப்பு தலைவியான சூனைட் முதலமைச்சருக்கு விளக்கியதுடன், இவர்களின் சட்டவிரோத பிரவேசத்தை தடுப்பதற்கான வழிகள் குறித்த ஆலோசனைகளையும் வினவினார்.
இங்கு முதலமைச்சர் கருத்துதெரிவிக்கையில், கடல் வழியான பயணத்தில் உள்ள உயிர் ஆபத்துக்களையும், இவ்வாறு சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படமாட்டாது என்பதனையும் பொதுமக்களுக்கு விளக்குவதன் மூலமே இவற்றை தடுக்க முடியும். அத்தோடு இது குறித்து மக்களுக்கு விளிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண பணிமனையில் இடம்பெற்றஇச்சந்திப்பில் கிழக்கு மாகாண முதல்வரின் சிரேஷ்ட ஆலோசகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சஹீத் அவர்களும் கலந்து கொண்டார்.


Leave a comment