– ஏ.எல்.எம்.தாஹிர்

மீள்குடியேற்ற அமைச்சினால் மாவட்ட செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உதவியாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று (13) காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் செயலாளர் ஜனக சுகததாஸ தலைமையில் இடம்பெற்றது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சித் திட்ட முன்னேற்றம் தொடர்பாக இச்செயலமர்வில் விரிவாக ஆராயப்பட்டது.
மீள்குடியேற்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற மாவட்டங்களில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உதவியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை இதன்போது அமைச்சின் செயலாளர் வலியுறுத்திக் கூறினார்.

அமைச்சினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மற்றும் எதிர்காலத்தில் செயற்படுத்தப்பட இருக்கின்ற கருத்திட்டங்கள் அவை தொடர்பான நோக்கங்கள் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
வடக்கு,கிழக்கு, மாகாணங்களில் இருந்து வருகைதந்திருந்த அபிவிருத்தி உதவியளர்களிடம், அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சின் அதிகாரிகள் , குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் பிற்பாடான செயற்பாடுகளை துரிதமாகவும் வெற்றிகரமாவும் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளையும் இதன்போது வழங்கினர்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ, மேலதிக செயலாளர் எம்.எம். நயீமுதீன், சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி தவஈஸ்வரி, உதவிச் செயலாளர் நிகரில்காந்தன், பிரதம கணக்காளர் சூரியக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் ஏக்கநாயக்க, பிரதி திட்டப்பணிப்பாளர் திருமதி தீபானி, உட்பட ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Leave a comment