– பழுளுல்லாஹ் பர்ஹான்

இலங்கையில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2013 தொடர்பில் முக்கிய கலந்துரையாடலொன்று அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நீதியமைச்சில் செவ்வாய்க்கிழமை (12) மாலை இடம்பெற்றது.
மலேஷியாவில் 2011 ஆம் ஆண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மிகச் சிறப்பாக நடாத்துவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்த டாத்தோ கலாநிதி முஹம்மத் இக்பால் இவ்வுரையாடலின் போது அந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு காரணமான அம்சங்களை விபரித்துக் கூறினார்.

முன்னதாக, திங்கட்கிழமை மாலையில் டாத்தோ இக்பால், அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் பஷீர்சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ. ஹஸனலி (முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்) எம்.எல்.எம். அஸ்லம், டாக்டர் தாஸிம் அஹமத், மருதூர் ஏ.மஜீத் ஆகியோர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இதுபற்றிய பூர்வாங்கச் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர்.

நீதியமைச்சில் நடைபெற்ற கருத்துப்பரிமாறலின் போது, பிரஸ்தாப மாநாட்டின் ஆரம்ப நிகழ்வை கொழும்பில் நடாத்துவதும், ஏனைய முக்கிய நிகழ்வுகளை கிழக்கு மாகாணத்தில் நடாத்துவதும் சிறப்பாகவிருக்கும் என அமைச்சர் ஹக்கீம் அபிப்பிராயம் தெரிவித்தார்.
நவீன இலக்கிய வடிவங்களை மையப்படுத்தி இம் மாநாட்டை நடாத்துவதும், அத்துடன் மாநாட்டுக்கு இணைந்ததாக புத்தகக் கண்காட்சி நூல் வெளியீட்டாளர்களுக்கான சந்திப்பு போன்றவற்றையும் ஏனைய கலாசார சமய நிகழ்வுகள் சிலவற்றையும் நடாத்துவதும் பொருத்தமானது என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
மாநாட்டு நிதிக்குழு முதலில் கூடி உத்தேச செலவினங்களைப் பற்றி ஆராயவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. மலேஷியாவிலிருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’ சஞ்சிகைகளின் பிரதிகளை அமைச்சருக்கும் ஏனையோருக்கும் டாத்தோ இக்பால் வழங்கி வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ. ஹஸனலி (மு.கா. செயலாளர் நாயகம்) அறிஞர் எஸ்.எச்.எம். ஜெமீல், புரவலர் ஹாஷிம் உமர், டாக்டர் தாஸிம் அஹ்மத், முஸ்லிம் மீடியா போரம் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம், மருதூர் ஏ.மஜீத், மானா மக்கீன், கவிஞர் ஏ.ஆர்.ஏ. ஹஸீர் (ரவூப் ஹஸீர்), புர்கான்பீ இப்திகார், ஊடாகவியலாளரும், நாடக ஆசிரியருமான ஏ.சி. நஜ்முத்தீன் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2002 ஆம் ஆண்டு கொழும்பில் அரச ஆதரவுடன் நடைபெற்றது. அதற்கான முயற்சிகளை அமைச்சர் ஹக்கீம் மேற்கொண்டிருந்தார்.
Leave a comment