
– முகம்மட் ரைஸ்
கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி தலைமையில் நகரசபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்ததான சிரமதானம் பழைய ஆஸ்பத்திரியில் இன்று இடம்பெற்றது.
டெங்கு அபாயம் அதிகரித்து வரும் நிலையில் நாம் நமது வீட்டுச் சூழல், அலுவலக சுற்றுப்புறச் சூழலினை சுத்தமாக வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய வகையில் நாட்டின் பல பாகங்களிலும் சிரமதான அடிப்படையில் டெங்குப் பெருக்கத்தை கட்டுப்படுத்தி உயிர் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் பொருட்டு அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் சிரமதானங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா நகரசபை ஊழியர்கள் அனைவரும் சேர்ந்ததான சிரமதானம் வாராவாரம் சனிக்கிழமைகளில் கிண்ணியா பிரதேசத்தில் காணப்படும் பொதுக் கட்டிடங்கள், காணிகளில் நடைமுறைப்படுத்தி வருவதனால் நுளம்புப் பெருக்கத்தையும், நுளம்பு பெருக்கத்திற்கான சூழலையும் கட்டுப்படுத்தும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இச்சிரமதான நிகழ்வின் போது கிண்ணியா நகரசபை நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம்.ஹில்மி சட்டத்தரணி உரையாற்றுகையில் இச்சிரமதானத்தைப் போன்று சகல அலுவலகங்கள் நிறுவனங்கள் பாடசாலைகளும் சிரமதான செயற்பாட்டினை முன்னெடுத்து செயற்படுத்திவருமானால் டெங்கு நுளம்புப் பெருக்கத்தையும், பெருகக்கூடிய சூழலையும் அதனால் ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும் கட்டுப்படுத்தமுடியுமென நகரபிதா தெரிவித்தார்.

2013 நடப்பு ஆண்டின் முதலாவது டெங்கு ஒழிப்பு வாரம் இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமானது. இது இம்மாதம் 13 ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரமாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் நாமும் ஒன்றிணைந்து செயற்படுத்தி ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.


Leave a comment